‘மோசமான வரலாறு வீரர்களே’ - குரூப் சுற்றோடு வெளியேறிய பார்சிலோனா
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற முடியாமல் குரூப் சுற்றுடன் பார்சிலோனா அணி வெளியேறியுள்ளது.
சாம்பியன் லீக் கால்பந்து நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்பெயின் நாட்டின் கால்பந்தாட்ட கிளப் அணியான பார்சிலோனா (ஸ்பெயின்), பேயர்ன் முனிச் (ஜெர்மனி) அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பேயர்ன் முனிச் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதனால் இப்பிரிவில் மூன்றாம் இடத்தை மட்டுமே பிடித்த பார்சிலோனா அடுத்த சுற்றுக்குத் தகுதிபெறவில்லை.
இதன்மூலம் சாம்பியன்ஸ் லீக்கில் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற முடியாமல் குரூப் சுற்றுடன் அந்த அணி வெளியேறியுள்ளது. இதனால் பார்சிலோனா இனி சாம்பியன்ஸ் லீக்கிற்கு அடுத்த நிலையில் உள்ள யூரோப்பா லீக் போட்டியில் மட்டுமே இடம்பெறும். இந்த பிரிவில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் மட்டுமே சாம்பியன்ஸ் லீக் போட்டியின் இரண்டாம் சுற்றுக்குச் செல்லும்.
மேலும் 17 ஆண்டுகால சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் முதல் முறையாக பார்சிலோனா குரூப் சுற்றுடன் வெளியேறி உள்ளது. ஐந்து முறை சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை வென்ற அணி, குரூப் சுற்றோடு வெளியேறி உள்ளது அந்த அணியின் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 2004 - 05 சீசன் முதல் பார்சிலோனா அணி தொடர்ச்சியாக நாக்-அவுட் சுற்றான ‘ரவுண்ட் ஆப் 16’ விளையாடி வருகிறது.
2004 சீசன் முதல் கடந்த சீசன் வரை மெஸ்ஸி பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்தார். அவர் நடப்பு சீசனில் PSG அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.