நீங்கள் இந்த வங்கியின் வாடிக்கையாளரா? தனியார் ஆக போகுதாம்! உஷார்!
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை தனியாருக்கு விற்கும் முயற்சியை கைவிட வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இரண்டு பொதுத்துறை வங்கிகளை, தனியாருக்கு விற்கப் போகின்றோம் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி அறிவித்தார்.
அப்போது எந்த வங்கி எனக் குறிப்பிடவில்லை. ஆனால் தற்போது அதில் ஒன்று இந்தியன் ஓவர்சீஸ் வங்கி என்பது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் பாரம்பரியமிக்க அந்த வங்கியை தனியாருக்கு விற்க கூடாது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பிப்ரவரி 10, 1937இல், சென்னையைத் தலைமை இடமாகக் கொண்டு, மு.சி.த.மு. சிதம்பரம் செட்டியார் அவர்களால் தொடங்கப்பட்டது. 1969 ஆம் ஆண்டு, நாட்டுடைமை ஆக்கப்பட்டது.
தற்போது, தமிழ்நாட்டின் முன்னோடி வங்கியாகத் திகழ்கின்றது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்கள், குக்கிராமங்களில் 1500 கிளைகள் உள்ளன. 15 மண்டல அலுவலகங்களும் உள்ளன. பிற வங்கிகளை ஒப்பிடுகையில், ஐஓபி வங்கியில், பிற கிளைகளுக்குப் பணம் செலுத்துதல், புத்தகம் வரவு வைத்தல் போன்ற சேவைகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றன.
எனவே, தமிழ்நாட்டில் ஐஓபி வங்கியில் கணக்கு வைத்துள்ள ஒருவர், இந்தியாவின் எந்த வங்கிக் கிளையிலும், சேவைக் கட்டணம் இல்லாமல், பணம் எடுக்க இயலும். பிற வங்கிகளில், இதற்குத் தனிக் கட்டணம் வாங்குகின்றார்கள்.
கிராமப்புற மக்களுக்கு, குறைந்த வட்டியில் விவசாய நகைக்கடன், பயிர்க்கடன், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு ஊதியம் முதலியவற்றை, ஐஓபி வழங்கி வருகின்றது. தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையான ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களின் கணக்குகள் ஐஓபி வங்கியில் உள்ளன.
மாவட்ட நீதிமன்றங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், மருத்துவக் கல்லூரிகளிலும் கிளைகள் உள்ளன. தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில், கடந்த 50 ஆண்டுகளாக ஐ.ஓ.பி. வங்கிக் கிளை செயல்பட்டு வருகின்றது.
கடந்த 2005 ஆம் ஆண்டு, ஐ.ஓ.பி. வங்கியை, வடமாநில வங்கியுடன் இணைக்கத் திட்டமிட்டபோது, முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் கடும் எதிர்ப்புக் குரல் எழுப்பினார்கள். எனவே, அந்த முயற்சி அப்போது கைவிடப்பட்டது.
ஏற்கனவே, பேங்க் ஆப் தமிழ்நாடு’ என்ற பெயரில் இயங்கி வந்த வங்கியை, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியுடன் இணைத்தார்கள். இப்போது, ஐஓபியைத் தனியாருக்கு விற்க முயற்சிக்கின்றார்கள்.
தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்க்கின்ற, 85 ஆண்டுகளாக இயங்கி வருகின்ற பெருமை மிக்க இந்தியன் ஓவர்சீஸ் வங்கி என்ற பொதுத்துறை நிறுவனத்தை, தனியாரிடம் கொடுப்பதைத் தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என, மதிமுக சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.