இந்திய அணியை திட்டி தீர்க்கும் ரசிகர்கள் - வங்கதேசத்தின் வரலாற்று வெற்றியால் வந்த வினை
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வங்கதேசம் வென்ற நிலையில் இந்திய அணியை ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்.
வங்கதேச அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 38 ரன்கள் வித்தியாசத்திலும், 2வது போட்டியில் தென்னாப்பிரிக்க அணியும் வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து 3வது ஒருநாள் போட்டி செஞ்சூரியனில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி வங்கதேச அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 37 ஓவர்களில் 10 விக்கெட்டையும் இழந்து 154 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனையடுத்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வங்கதேச அணி 26.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் சொந்த மண்ணில் ஒருநாள் போட்டியில் முதல் முறையாக தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் வங்கதேச அணி கைப்பற்றி வரலாற்று சாதனைப் படைத்தது. இதனால் அந்த அணி பாராட்டு மழையில் நனைந்து வரும் நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு சென்ற இந்திய அணி அங்கு நடைபெற்ற தொடரை 0-3 என்று முழுவதுமாக இழந்தது.
ஆனால் நம்மை விட பல விதங்களில் பலம் குறைந்த அணியாகக் கருதப்படும் வங்கதேசம் வெற்றி பெற்றதை இந்திய ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.