பாகிஸ்தான், துருக்கி, சவுதி அரேபியா கூட்டணி - இணைய ஆர்வம் காட்டும் வங்கதேசம்
bangladesh interest to joining mecca pact: பாகிஸ்தான், துருக்கி, சவுதி அரேபியாவின் பாதுகாப்பு கூட்டணியில் இணைய வங்கதேசம் ஆர்வம் தெரிவித்துள்ளது.
மெக்கா ஒப்பந்தம்
பாகிஸ்தான், சவுதி அரேபியா மற்றும் துருக்கிஆகிய நாடுகள் இந்த மாத தொடக்கத்தில் மெக்காவில் கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

அதன்படி, 3 நாடுகளில் ஏதேனும் ஒன்றின் மீதான ஆயுதத் தாக்குதலை, அவை 3 நாடுகளின் மீதான தாக்குதலாகக் கருதுவோம் என அவை முறைப்படி உறுதியளித்துள்ளன. இதனை ஆய்வாளர்கள் இஸ்லாமிய நேட்டோ என கருதுகின்றனர்.
இந்த சூழலில், இந்தியாவின் மற்றொரு அண்டை நாடான வங்கதேசமும் இந்த கூட்டமைப்பில் இணைய ஆர்வம் காட்டியுள்ளது.
இது குறித்து பேசியுள்ள வங்கதேச வெளியுறவு ஆலோசகர் ஹுமாயூன் கபீர், "வங்காளதேசம் தனது சொந்த நலன்களையும், உலகப் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தின் மாறிவரும் இயக்கவிலை கருத்தில் கொண்டு, சவுதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஒரு பொருளாதார அல்லது பாதுகாப்பு கட்டமைப்பில் இணைவதற்கான சாத்தியக்கூறு குறித்து நேர்மறையான அணுகுமுறையைக் கொண்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.

மேலும், 2024 ஆம் ஆண்டில் வங்கதேசத்தில் ஆட்சி கவிழ்ந்த பின்னர் அப்போதைய பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவிற்கு இந்தியா தஞ்சம் கொடுத்ததையும் விமர்சித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், "வங்காளதேசத்தில் 1,500-க்கும் மேற்பட்டோர் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்த ஜூலை மாத மாபெரும் எழுச்சியின் மூலம் சர்வாதிகார ஆட்சி வீழ்ந்த பிறகு, அங்கு தப்பிச் சென்று ஒரு குற்றவாளியாக அடைக்கலம் புகுந்த பாசிச ஷேக் ஹசீனாவுக்கு இந்தியாவில் தஞ்சம் வழங்குவது, இந்தியாவின் ஜனநாயக நெறிமுறைகளுக்கு முரணானது.
குறிப்பிட்ட பிரச்சினைகள் குறித்து இரு நாடுகளுக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டு, கண்ணியமான அழைப்பு விடுக்கப்படாவிட்டால், பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்கு முன்னதாக வங்கதேச பிரதமர் இந்தியாவிற்கு வருவதற்கான சாத்தியம் குறைவாகவே உள்ளது" என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |