வங்கதேச படகு தீ விபத்தில் 41 பேர் பலி - கேப்டன் உட்பட 8 பேர் கைது
வங்கதேசத்தில் படகில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 41 பேர் பலியான நிலையில் விசார்ணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து கடந்த வியாழக்கிழமை இரவு 400 பேருடன் 3 அடுக்குகளை கொண்ட பயணிகள் படகு பர்குனா மாவட்டம் நோக்கி புறப்பட்டது. ஜலாஹதி மாவட்டத்தில் உள்ள சுகந்தா ஆற்றில் நேற்று அதிகாலை 3 மணியளவில் சென்றுகொண்டிருந்தபோது படகில் தீடிரென தீ விபத்து ஏற்பட்டது. எஞ்சின் அறையில் ஏற்பட்ட தீ மளமளவென படகின் பிற பகுதிகளுக்கும் வேகமாக பரவியது.
அதிகாலையில் பயணிகள் அனைவரும் உறங்கிக்கொண்டிருந்ததால் இந்த தீ விபத்தில் பலர் சிக்கிக்கொண்டனர். தீயில் இருந்து தங்கள் உயிரை காப்பற்றிக்கொள்ள பல பயணிகள் ஆற்றில் குதித்தனர். இந்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 9 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 150 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பயங்கர சம்பவத்திற்கு படகின் பாதுகாப்பை அலட்சியப்படுத்தியதே காரணம் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பயணிகளை ஏற்றிச்செல்லும் மூன்று மாடி கொண்ட படகில் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றியுள்ளனர். மேலும் படகில் பாதுகாப்பு உபகரணங்களான மிதவைகள், தீயை அணைக்கும் கருவிகள் இல்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும் தீ விபத்து ஏற்பட்டவுடன் படகை நங்கூரமிட்டு நிறுத்தாமல் சிறிது தூரம் செலுத்தியதும் தெரிய வந்துள்ளது. இதனால் படகின் கேப்டன் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.