ஒலிம்பிக்கில் பதக்கங்களை குவிக்கும் இந்தியா: வெண்கலம் வென்றார் பஜ்ரங் புனியா
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுவரும் 32வது ஒலிம்பிக் தொடரின் ஆண்களுக்கான மல்யுத்தப் போட்டியில் 65 கிலோ எடை பிரிவில் நேற்று நடந்த அரையிறுதியில் இந்தியாவின் பஜ்ரங் புனியா 5-12 என்ற கணக்கில் அஜர்பைஜானின் ஹாஜி அலியேவிடம் தோல்வியடைந்தார்.
இதனையடுத்து இன்று வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி நடைபெற்றது. இதில் கசகஸ்தானின் தவுலத் நியாஸ்பெகோவை எதிர்கொண்ட பஜ்ரங் புனியா முதல் 3 நிமிடங்களில் நிதான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார்.
இறுதியில் அவரது லாவகமான பிடிகளில் இருந்து தப்பிக்க முடியாமல் கசகஸ்தான் வீரர் 8-0 என்ற புள்ளிக்கணக்கில் சுருண்டார். இதன்மூலம் வெண்கலப்பதக்கம் வென்று பஜ்ரங் புனியா அசத்தினார். இந்த வெண்கலம் பதக்கம் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.