அம்பேத்கர் 132-வது பிறந்தநாள் - அரசியல் தலைவர்கள் மலர் தூவி மரியாதை
இன்று அம்பேத்கரின் 132-வது பிறந்த நாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்த மாமேதை டாக்டர் அண்ணல் அம்பேத்கர் 1891ம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி பிறந்தார். கல்வியில் சிறந்து விளங்கிய இவர், பொருளாதாரம், நீதித் துறை, அரசியல் என பன்முக திறமை கொண்டவராக விளங்கினார்.
இந்தியாவின் முதல் சட்டத்துறை அமைச்சராகப் பதவி வகித்த அம்பேத்கர் தனது 65வது வயதில் 1956ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி மறைந்தார்.இவரைச் சிறப்பிக்கும் விதமாக இந்திய அரசு உயரிய விருதான பாரத ரத்னா விருதை 1990ம் ஆண்டு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளை பொது விடுமுறையாக மத்திய அரசு அறிவித்தது. அன்றைய தினத்தில் மத்திய அரசு அலுவலங்களுக்கும், நிறுவனங்களுக்கும் பொது விடுமுறையை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறை ஆண்டுதோறும் நடைமுறைப்படுத்தப்படும் என்று மத்திய அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அம்பேத்கர் பிறந்தநாள் விழாவையொட்டி, அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், மக்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் பல மாவட்டங்கள், பல மாநிலங்களில் அம்பேத்கர் பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அம்பேத்கரின் 132வது பிறந்தநாளையொட்டி டெல்லி பாராளுமன்றத்தில் உள்ள அவரது சிலைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளனர். இவர்களை தவிர சபாநாயகர், மத்திய அமைச்சர்களும் மரியாதை செலுத்தினர்.
அதேபோல், அம்பேத்கரின் 132வது பிறந்தநாளையொட்டி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அம்பேத்கரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அம்பேத்கரின் வாழ்க்கை, செயல்பாடுகள் உலகெங்கிலும் கோடிக்கணக்கானவர்களுக்கு உத்வேகத்தை அளித்துள்ளது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், பாட்னாவில் அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.