அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கருவறைக்கு முதலமைச்சர் ஆதித்யநாத் யோகி அடிக்கல் நாட்டினார்
அயோத்தியில் சுமார் ரூ.1,100 கோடி மதிப்பீட்டில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்படுகிறது.
இது உலகமெங்கும் உள்ள இந்துக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தக் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு, வெள்ளி செங்கல்லை எடுத்துக்கொடுத்து கட்டுமானப்பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்தக் கோவில்அறக்கட்டளையின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தலைமையில் என்ஜினீயர்கள், கட்டுமான வல்லுனர்கள் கடந்த மாதம் 2 நாட்கள் கூடிப்பேசினர். அப்போது ராமர் கோவிலை 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பக்தர்களுக்காக திறப்பது என முடிவு செய்தனர்.
அதைத் தொடர்ந்து ராமர் கோவிலில் வழிபாடு நடத்த பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தகவல்கள் வெளியானது. அதே நேரத்தில் கோவில் வளாகத்தின் கட்டுமானப்பணிகள் முழுமையாக 2025 இறுதியில்தான் முடியும் எனவும் தகவல்கள் வெளிவந்தது.
இந்நிலையில், ராமபிரான் குடிகொள்ளும் கருவறைக்கு உத்திரபிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத் யோகி அடிக்கல் நாட்டினார்.