133 ஆண்டுகால டெஸ்ட் சாதனையை முறியடிப்பாரா அக்ஸர் படேல் - அப்படி என்ன ஸ்பெஷல்?
இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி இன்று நடக்கவுள்ள நிலையில் அக்ஸர் படேல் சாதனை ஒன்றை படைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. மொகாலியில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்ற நிலையில் இன்று 2வது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது.
இதனிடையே இந்த போட்டியில் 133 ஆண்டுகால மிகப்பெரிய சாதனையை சமன்செய்யும் வாய்ப்பு அக்ஸர் படேலுக்கு ஏற்பட்டுள்ளது. அதாவது இன்று தொடங்கும் 2வது டெஸ்ட் போட்டியில் அக்ஸர் படேலுக்கு வாய்ப்பு கிடைத்து அவர் 14 விக்கெட்டுகளை வீழ்த்தினால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைப் படைப்பார்.
இதற்கு முன்பாக 1880 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய வீரர் சார்லஸ் டர்னர் வெறும் 6 டெஸ்ட் போட்டிகளிலேயே இந்த சாதனையைப் படைத்தார். அவருக்கு அடுத்தப்படியாக தென்னாப்பிரிக்காவின் வெர்னான் பிலாண்டர் 7 டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுகள் எடுத்தார்.
ஆனால் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய சீனியர் பவுலர்கள் மத்தியில் 14 விக்கெட்டுகளை எடுப்பது அக்ஸர் படேலுக்கு சவாலாக இருந்தாலும் 133 ஆண்டுகால சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு அவருக்கு உள்ளது.