ஆவின் பால் கெட்டு போக வாய்ப்பில்லை : அமைச்சர் நாசர் பேட்டி
ஆவின் பால் தரம் கெடாமல் வழங்க தமிழகம் முழுவதும் 591 குளிரூட்டும் நிலையங்கள் முறையாக செயல்படுத்தப்பட்டு வருவதாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார்
சென்னை ஆவடி அருகே திருமுல்லைவாயில் தமிழ்நாடு சிறப்புகாவல்படை காவலர் குடியிருப்பில் ஆவின் பால் விற்பனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.இதன் திறப்பு விழாவில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கலந்து கொண்டு ஆவின் பால் விற்பனை நிலையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சா.மு.நாசர் தமிழகத்தில் ஆவின் பால் தரம் குறித்து கடந்த 2019 எடுக்கப்பட்ட ஆய்வறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.
ஆனால் இந்த ஆய்வறிக்கை தற்போது எடுக்கப்பட்டது போல் வதந்திகள் வருகின்றன. இது உண்மைக்கு புறம்பான செய்தி என்றார்.கடந்த ஆட்சியில் இருந்த ஆவின் பாலை விட தற்போது ஆட்சியில் ஆவின் பாலை தரம் உயர்த்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.ஆவின் பால் பதம் மாறாமல் இருக்க தமிழகம் முழுவதும் உள்ள 591 குளிரூட்டும் நிலையங்களும் முறையாக பராமரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இதனால் ஆவின் பால் கெடுவதற்கு வாய்ப்பில்லை என்ற அவர் பதப்படுத்தப்பட்ட பால் ஆவின் பால் உபபொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில் பால்வளத்துறை இயக்குனர் கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.