ஐயா பிரதமரே உங்கள் பதவியை தனியாருக்கு விற்றுவிடலாமா’? - பேனர் வைத்த ஆட்டோ ஓட்டுநர் கைது!
மயிலாடுதுறையில் பாரத பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து ஆட்டோவில் பதாகை வைத்தவரை காவல்துறையினர் பதாகையினை அகற்றி எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து ஆட்டோவில் பேனர் பொருத்தியிருந்த ஆட்டோ உரிமையாளர் குறித்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, காவல்துறையினர் ஆட்டோவில் இருந்த பேனரை அகற்றியுள்ளனர்
. பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் 75 ஆண்டுகால சொத்துக்களை விற்று நாசமாக்குவதாகவும், ராணுவம், நீதித்துறை, விண்வெளித்துறை மற்றும் பிரதமர், ஜனாதிபதி பதவிகளை தனியாருக்கு விற்றுவிடலாமா? என்றும், இதனை தேச துரோகம் என விமர்சித்தும், மயிலாடுதுறையைச் சேர்ந்த ஆட்டோ உரிமையாளர் வடிவேலு என்பவர் தனது ஆட்டோவில் பேனர் பொருத்தியிருந்தார்.

இதனை பார்த்து ஆத்திரமடைந்த மயிலாடுதுறை பாரதிய ஜனதா கட்சியினர் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். உடனடியாக ஆட்டோ மற்றும் உரிமையாளரை பிடித்து காவல்நிலையம் கொண்டு வந்தநிலையில்ஆட்டோ உரிமையாளர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் கடிதம் எழுதி கொடுத்து சென்றார்.
பின்னர் பேனரை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர்
மயிலாடுதுறையில் இந்திய நாட்டின் பிரதமரை விமர்சித்து ஆட்டோவில் பேனர் பொருத்தப்பட்ட சம்பவம் நகரில் பரபரப்பை ஏற்படுத்தியது.