மக்கள் தடுப்பூசி கட்டாயம் செலுத்திக்கொள்ள வேண்டும் ; இல்லையெனில் 3 லட்சம் அபராதம் - அதிரடி காட்டும் ஐரோப்பிய நாடு

law mandatory covid vaccination austria
By Swetha Subash Jan 31, 2022 07:30 AM GMT
Report

மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதை நாளை முதல் கட்டாயமாக்கியிருக்கிறது ஆஸ்திரிய அரசு.

இந்த நடவடிக்கையின் மூலம் பொது மக்களை தடுப்பூசி செலுத்த கட்டாயப்படுத்தும் முதல் ஐரோப்பிய நாடாக ஆஸ்திரியா அறியப்படுகிறது.

பிப்ரவரி 1 வரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு 3,600 யூரோக்கள், இந்திய மதிப்பில் சுமார் ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அபராதம் செலுத்தாதவர்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு நாட்டு மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து தலைநகர் வியன்னாவில் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

தடுப்பூசி செலுத்துவது எங்கள் அடிப்படை உரிமை; அதில் தலையிட அரசுக்கு எந்த உரிமையும் இல்லை என கூறி சுமார் 10 ஆயிரம் பேர் பேரணியாக சென்று அரசுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பி வருகின்றனர்.

ஆனால் அரசு தன்னுடைய முடிவை மாற்றிக்கொள்ளவில்லை. இருப்பினும் அரசு உத்தரவுக்கு பயந்து பலரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சுகாதார அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களின்படி, கடந்த இரண்டு வாரங்களில் வயது வந்தவர்களில் 85,000 பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.

18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 83 சதவீதம் பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். 80 சதவீதம் பேருக்கு முழுமையாக அதாவது 2 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

ஆஸ்திரியாவில் இன்னும் 17 சதவீதம் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை.

தடுப்பூசியைக் கட்டாயமாக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் சட்டமும் இயற்றப்படவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.