நடிகை கடத்தப்பட்ட வழக்கு : விசாரணை அதிகாரியை கொல்ல காவியா மாதவன் சதி திட்டம் தீட்டியது அம்பலம்
கேரளத்தில் கடந்த 2017-ம் ஆண்டு பிரபல நடிகை நள்ளிரவில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கின் பின்னணியில் இருந்ததாக நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இது தொடர்பான வழக்கு விசாரணை எர்ணாகுளம் சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நடிகை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானபோது, போட்டோக்கள் எடுக்கப்பட்டது என்றும், அது திலீப்பிடம் உள்ளது என்றும், அவர் உள்பட பலரும் அந்த படங்களை பார்த்துள்ளனர் அது தனக்கு தெரியும் என்றும் திலீப்பின் நண்பரும், இயக்குனருமான பாலசந்திரகுமார் வெளிப்படையாக மீடியாக்களிடம் பேட்டி கொடுத்திருந்த நிலையில்,
நடிகர் திலீப் பயன்படுத்திய செல்போனைகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. செல்போன்களை ஆய்வு செய்ததில் அதிலிருந்த தரவுகளை நடிகர் திலீப் அழித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக விசாரணை அதிகாரியை கொலை செய்ய திட்டம் தீட்டியது தொடர்பாக நடிகர் திலீப் உள்பட 8 பேர் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் நடிகை காவ்யா மாதவனுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து இந்த வழக்கில் காவ்யா மாதவனுக்கு உள்ள தொடர்பை உறுதி செய்யும் வகையில், நடிகர் திலீப்பின் மைத்துனர் சூரஜ் மற்றும் திலீப்பின் நண்பரான சரத் ஆகியோர் போனில் பேசும் ஆடியோ உரையாடல்கள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த உரையாடல் அடங்கிய சி.டி.யை கேரள உயர்நீதிமன்றத்தில் குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்துள்ள நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த நாளை (திங்கட்கிழமை) நேரில் ஆஜராக நடிகை காவ்யா மாதவனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த விசாரணையின் மூலம் மேலும் பல முக்கிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.