சாதி என்கிற கொடிய நோயை ஒழித்தால்தான் கொடூரங்கள் நடக்காமல் இருக்கும் - சீமான் ஆவேசம்!
அரக்கோணத்தில் இரட்டைக் கொலை வழக்கில் சம்பந்தமாக குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி இருக்கிறார்.
இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு - அரக்கோணத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த அர்ஜுனன், சூர்யா ஆகிய இருவரும் படுகொலை செய்யப்பட்ட செய்தியறிந்து பேரதிர்ச்சியும், பெருந்துயரமடைந்துள்ளேன். தமிழ்ச் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் சாதி என்கிற கொடிய நோயை அறவே ஒழித்தால்தான் இதுபோன்ற கொடூரங்கள் நிகழாமல் இருக்கும்.
சாதிய வன்மத்தோடும், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடும் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு மனித உயிர்களை பறிக்கின்ற இதுபோன்ற கோரச்சம்பவங்களை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.