ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள தமிழக வீராங்கனை - மகிழ்ச்சியில் ஊர்மக்கள்
சர்வதேச தடகள போட்டியில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த சமீஹா பர்வீன் வெற்றி பெற்று ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு பகுதியைச் சேர்ந்த முஜீப் - சலாமத் தம்பதியின் மகள் சமீஹா பர்வீன் போலந்து நாட்டில் நடைபெற உள்ள சர்வதேச உலக காதுகேளாதோர் தடகள போட்டியில் பங்கேற்பதற்காக டெல்லியில் நடைபெற்ற தகுதி போட்டியில் கலந்துக்கொண்டு வெற்றி பெற்றார்.
ஆனால் ஒரே பெண் வீராங்கனையாக அவர் தேர்வாகி இருந்ததால், பாதுகாப்பு மற்றும் செலவுக் காரணங்களால் மற்ற ஆண் வீரர்களுடன் அவரை போலந்துக்கு அழைத்துச் செல்ல தேசிய விளையாட்டு ஆணையம் தயங்கியது. இதனால் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சமீஹா வழக்கு தொடர்ந்தார்.
மாணவியை போலந்து நாட்டில் நடைபெறும் சர்வதேச போட்டியில் பங்கேற்க வைக்க இந்திய விளையாட்டு ஆணையத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார். பல்வேறு தடைகளைத் தாண்டி உலக சாம்பியன்ஷிப் போட்டிக்குச் சென்ற சமீஹா பர்வின் ஏழாவது இடம் பிடித்து ஆறுதல் வெற்றி பெற்றுள்ளார்.
16 பேர் கலந்து கொண்ட நீளம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவிற்காக விளையாடிய சமீஹா சராசரியாக 4.98 மீட்டர் தாண்டியிருந்தார். பட்டியலில் முதல் 8 இடம் பிடிப்பவர்கள் வரும் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெறுவார்கள். அந்த வகையில் சமீஹா பர்வீனும் தகுதிப் பெற்றுள்ளார். இதனை கடையாலுமூடு பகுதி மக்கள் கொண்டாடி வருகின்றனர்.