தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேச விவகாரம் - தடை நீக்கி மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு

By Nandhini May 08, 2022 10:22 AM GMT
Report

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் ஆண்டுதோறும் பட்டின பிரவேச விழா நடைபெறும். இதில் ஆதீனத்தை பல்லக்கில் மக்கள் தூக்கிச்சென்று வீதியுலா செல்வது வழக்கம்.

மனிதரை, மனிதர்கள் தூக்கிச்செல்வதை தடை செய்ய வேண்டும் என்று திராவிடர் கழகம் உள்ளிட்ட சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

இதனையடுத்து, மயிலாடுதுறை உதவி கலெக்டர் பாலாஜி, பட்டின பிரவேசம் விழாவில் ஆதீனத்தை மனிதர்கள் பல்லக்கில் தூக்கி செல்ல தடைவிதித்து உத்தரவிட்டார்.

இத்தடை குறித்து மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பேசுகையில்,  500 ஆண்டுகளாக நடக்கும் பாரம்பரிய நிகழ்ச்சிக்கு தடை விதித்தது வருத்தம் அளிக்கிறது. உயிரே போனாலும் பரவாயில்லை, நானே சென்று தருமபுர ஆதீன பல்லக்கை சுமப்பேன். பட்டின பிரவேச நிகழ்வை நடத்த அரசு அனுமதி கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இது குறித்து மன்னார்குடி இராமனுஜ ஜீயர் பேசுகையில், பட்டின பிரவேசத்தை யாராலும் தடுக்க முடியாது. இதுபோல் தொடர்ந்து இந்து மதத்திற்கு எதிராக செயல்பட்டால் ஒரு அமைச்சரும் சாலையில் நடக்க முடியாது என்று எச்சரிக்கை விடுத்தார்.

இதற்கிடையில், மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. இது குறித்து நான் பிரதமரை சந்திக்க போகிறேன் என்று தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, பல்லக்கை தூக்கும் விவகாரம் பெரிய அளவில் பூதாகரமாக வெடித்து வந்தது.

இந்நிலையில், தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுகிறது என்று மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தடை நீடிக்கப்பட்டதையடுத்து வரும் 22ம் தேதி ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச் செல்லும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.   

தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேச விவகாரம் - தடை நீக்கி மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு | Athena Town Entrance