மகாபாரதம் 1 - பேரழகி காந்தாரி என்பவள் யார்?
பண்டைய காலம் முதல் இன்றைய காலம் வரை பெண்கள் பெரும்பாலும் பல இன்னல்களுக்கு ஆளாகியிருக்கின்றன. இதில் அரசகுமாரியாக இருந்தால் என்ன, ஏழையாக பிறந்தால் என்ன அனைத்து நிலைகளிலும் பெண்கள் அடிமைப்பட்டுத்தான் வாழ்ந்து வருகின்றனர்.
பேரழகியாகவே இருந்தாலும் கணவனும், பிள்ளைகளும் சொல் பேச்சு கேட்வில்லையென்றால் அவளின் அத்தனை பண்புகளும் அழிந்து போகும்.
அப்படி பேரழகியாய் திகழ்ந்த காந்தாரியின் வாழ்க்கையை பார்ப்போம்.
காந்தாரி பேரழகு கொண்டவள். கண்கள் காந்தம் போல் இருந்ததால் அவளுக்கு காந்தாரி என்று பெயர் வைக்கப்பட்டது. அழகும் இளமை கொண்ட காந்தாரி அனைத்து கலைகளையும் கற்றாள். எல்லாவிதமான ஆயுதங்களையும் சுலபமாகக் கையாளும் திறன் அவளுக்கு இருந்தது.
காந்தார மன்னன் சுலபனின் மகள் தான் காந்தாரி. மிகவும் செல்லமாகத் தாய், தந்தை காந்தாரியை வளர்த்தனர். அழகும், அறிவும் கொண்ட காந்தாரிக்கு எல்லா பெண்களைப் போலவே திருமண ஆசை இருந்தது. கணவனைப் பற்றிய கனவுகளும், கற்பனைகளும் அவளுக்கு நிறைந்திருந்தது.
தவம் புரிந்து சிவபெருமானிடம் தனக்கு நூறு பிள்ளைகள் பிறக்க வேண்டும் என்ற வரத்தைப் பெற்றவள். ஆனால் அவளின் ஜாதக தோஷத்தின் படி அவளுக்கு திருமணம் செய்யும் முதல் கணவன் இறந்துவிடுவான் என்ற விதி இருந்தது. இது தெரிந்தால் எந்த மன்னனும் தன் மகளை திருமணம் செய்ய வர மாட்டார்கள் என்று சுலபன் மிகவும் கவலைப்பட்டான்.
பீஷ்மர் தன் குலம் தழைக்க, திருதராஷ்டிரனுக்கு பெண் தேடிக் கொண்டிருந்தார். காந்தார நாட்டு மன்னனிடம் மகளை பெண்கேட்டு தூது அனுப்பினார். ஆனால் சுலபனுக்கு அதில் உடன்பாடு இல்லை. திருதராஷ்டிரன் குருடன். அறிவும், அழகும் ஆற்றலும் நிரம்பிய தன் மகள் ஒரு குருடனுக்கு மனைவியாவது என்ற எண்ணம் அவரை வாட்டியது.
பீஷ்மர் மீது கொண்ட பயத்தால் காந்தாரியை திருமணம் செய்து வைக்க சம்மதித்தார். மகளுக்கு தோஷம் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக ஒரு ஆட்டுக் கிடாயை அவளுக்கு மணம் செய்து வைத்து பின் அதை வெட்டி பலி கொடுத்தார். அதன் படி காந்தாரி தன் முதல் கணவனான ஆடை இழந்துவிட்ட விதவை. திருதராஷ்டிரன் இரண்டாம் கணவனாகிவிடுவதால் அவன் ஆயுளுக்கு பங்கம் இல்லை என்ற கணக்கு சரியாகிவிடுகிறது. (ஆனால் இதுவே காந்தார நாட்டு வாரிசுகளுக்கும் அதன் பின் குருகுல வம்சம் நாசமாவதற்கும் காரணமானது.
திருதராஷிடிரன் தான் தன் கணவன் என்று பெற்றோர்கள் நிச்சயம் செய்திருப்பதை அறிந்த காந்தாரி எதுவும் பேசாமல் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து விட்டாள். சகல சீர்வரிசைகளுடனும், பரிசுகளுடனும் தன் அக்காவை காந்தார நாட்டிலிருந்து பாரதத்திற்கு அழைத்துச் சென்றான் சகுனி. அங்கு காந்தாரியையும், சகுனியையும் சகல மரியாதைகளோடு வரவேற்று திருமணம் விமரிசையாக நடைபெற்றது.
தன் கணவன் பார்வை அற்றவனாக இந்த உலகை காண முடியாதவனாக இருந்த காரணத்தால் தானும் இனி இவ்வுலகை காண மாட்டேன் என்று தன் கண்களை கருப்புத் துணியால் கட்டிக் கொண்டுவிட்டாள் காந்தாரி. இது எத்தனை பெரிய தியாகம்.
தான் பிறந்த மண்ணை விட்டு மக்களை விட்டு பெற்றோரை உடன் பிறந்தோரை என சகலத்தையும் விட்டு புதிய இடத்துக்கு வாழ்க்கைப்பட்டு வந்திருக்கும் பெண், யாரும் பழகாத சூழலில் தன் கண்ணைக் கட்டிக் கொண்டு விழிகள் இருந்தும் பார்வையற்றவளாக வாழ ஆரம்பித்தாள்.
ஆனால் அத்தனை அறிஞர்களும், பெரியோர்களும் நிறைந்த சபையில் அவள் கண்ணைக் கட்டிக் கொண்ட போது 'ஏன் இப்படிச் செய்கிறாய் காந்தாரி? என்று யாரும் எதுவும் சொல்லவில்லை.’ வேண்டாம் காந்தாரி என திருதராஷ்டிரனும் கூட வாய் திறக்கவில்லை. பீஷ்மரும் தடுக்கவில்லை.
இது அவளின் கடமை போல கருதினாள். பத்து மாத கருக்காலம் தாண்டியும் அவளுக்கு பிள்ளை பெற முடியவில்லை. நூறு குழந்தைகளைப் பெற வேண்டும் என்ற வரம் வாங்கியும் தான் வஞ்சிக்கப் பட்டவளாக உணர்ந்தாள்.
அக்கோபத்தில் ஏமாற்றத்தில் தன் வயிற்றை தடியால் அடித்துக் கொண்டாள் காந்தாரி. அப்போது மாமிசப்பிண்டம் தசையும் ரத்தமுமாக வெளியேறியது. அங்கு வந்த வியாசர் அப்பிண்டங்களை சுத்தப்படுத்தி சம பாகங்களாகப் பிரித்தார். 100 பாகங்களும் மிச்சமாக ஒரு சிறிய பாகமும் தேறியது. அவற்றை நூற்றி ஒரு கிண்ணங்களில் பசு நெய்யை நிரப்பி அதில் போட்டு வைத்தார்.
உரிய காலம் ஆனதும் முதல் கிண்ணத்திலிருந்த பாகம் துரியோதனானகவும், அடுத்த கிண்ணத்தில் இருந்தது துச்சாதனாகவும் மற்றும் ஏனைய எல்லாம் அவனது சகோதரர்களாகவும் பிறப்பெடுத்தனர். கடைசி கிண்ணத்தில் இருந்த பிண்டம் துச்சலை என்ற பெண் குழந்தையாக உருவெடுத்தது. துரியோதனன் பிறந்த வேளை சரியில்லை என அரண்மனை ஜோசியர்கள் கூறினர். குல அழிவு இவனால் ஏற்படும் என்றும் அவனை அழித்து விடும்படியும் கூறிவிட்டனர். ஆனால் காந்தாரி ஏற்க மறுத்துவிட்டாள்.
பாரதப் போருக்கு முன் துரியோதனும் அவனது சகோதரர்களும் ஆசி பெற காந்தாரியின் கால்களின் விழுந்தனர். 'அறம் இருக்கும் இடத்தில் வெற்றி உண்டு’ என்று கூறியே வாழ்த்தி அனுப்பினாள். வியாசர் அளித்த திவ்ய திருஷ்டியால் போரை அவள் கண்மூடி இருந்த போதும் நேரில் பார்ப்பது போலவே கண்டாள்.
தனது ஒவ்வொரு மகன்களும் குந்தி புத்திரர்களால் அழிக்கப்படும் போது அவளது உள்ளம் பட்ட பாட்டை விளக்க வார்த்தைகள் இல்லை. பீஷ்மர் கோபத்துக்கு ஆளாகி சிறை வைக்கப்பட்டு பெற்றோர்களையும் சகோதரர்களையும் இழந்தவள் காந்தாரி.
திருமணத்திற்கு முன் தனக்கிருந்த தோஷத்தால், ஆட்டுக் கிடாயை மணம் செய்து, தோஷ பரிகாரம் செய்தது பீஷ்மருக்கு தெரியவந்து தன் குலத்திற்கு விதவை மருமகள் ஆவதா? இந்த விஷயம் மற்றவர் அறிந்தால் என்னை பார்த்து சிரிப்பார்கள்.
அந்த ரகசியத்தை மறைத்த சுலபன் குடும்பத்தினர் ஒருவரையும் விடாது அழித்தான். அதில் தப்பித்தது சகுனி மட்டுமே. குரு குலத்தை பூண்டோடு அழிப்பேன் என்று சகுனி தன் தந்தை சுலபனிடம் சத்தியம் செய்தான்.
அதன்படி சகுனி சூழ்ச்சி செய்து குரு குலத்தை அழிக்க திட்டதீட்டி அழிக்க உதவி செய்தான். கணவனாலும் காந்தாரிக்கு மகிழ்ச்சி இல்லை, பெற்ற குழந்தைகளாலும் அவளுக்கு நிம்மதி இல்லை. உடன் பிறந்த சகோதரனாலும் அவளுக்கு மகிழ்ச்சி இல்லை. மன அமைதி இன்றி பதட்டம் நிரைந்ததாகவே அவள் வாழ்க்கை இருந்தது.