வைகுண்ட ஏகாதசி பெருவிழா - ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது - பக்தர்கள் பரவசம்

astrology
By Nandhini Dec 14, 2021 02:17 AM GMT
Report

வைகுண்ட ஏகாதசி விழாவை ஒட்டி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், இன்று அதிகாலை 4:45 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.

பெருமாள்பாண்டியன் கொண்டை, ரத்தின அங்கி, ஆண்டாள் கிளி மாலை, வைர அபயஹஸ்தம் உள்ளிட்ட ஆபரணங்களோடு சொர்க்க வாசலுக்கு புறப்பாடு கண்டளிருனார். இதில் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன், காலை 7:00 மணி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா வழக்கமாக மார்கழி மாதம்தான் நடத்தப்படும். 19 ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் கார்த்திகை மாதத்தில் வைகுண்ட ஏகாதசி விழா நடத்தப்பட்டு சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு கார்த்திகை மாதத்தில் ஸ்ரீரங்கம் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 3-ந்தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

பகல்பத்து உற்சவத்தின் போது, தினமும் நம்பெருமாள் ஒவ்வொரு அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளுவது வழக்கம். இதேபோல் ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

பகல்பத்து உற்சவத்தின் 10-வது நாளான நேற்று நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த நிலையில், இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு இன்று அதிகாலை 4.45 மணிக்கு நடந்தது.

அதனை முன்னிட்டு அதிகாலை 3.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உட்பட பல்வேறு திருஆபரணங்கள் அணிந்து புறப்பட்டு ராஜமகேந்திரன் சுற்று வலம் வந்து நாழிகேட்டான் வாசல் வழியே குலசேகரன் திருச்சுற்றில் உள்ள தங்கக் கொடி மரத்தை சுற்றி துரைப்பிரகாரம் வழியாக சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் கடந்து சென்றார்.

ஸ்ரீரங்கத்தில் மட்டுமே இன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்ரீரங்கத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவை காண்பதற்காக பக்தர்கள் உலகெங்கும் இருந்து ஸ்ரீரங்கம் வந்துள்ளனர்.

கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும், கொரோனா பரவலை தடுக்கும் விதமாக, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, ரங்கா ரங்கா கோபுரம் வழியாக காலை 7 மணி முதல் 9 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வைகுண்ட ஏகாதேசி திருவிழாவிற்காக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோவில் வளாகத்தின் உட்புறப் பகுதியில் 117 சிசிடிவி கேமராக்களும் கோயில் வெளிப்புறப் பகுதியில் 90 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சொர்க்கவாசல் திருவிழாவிற்காக வரும் பக்தர்களின் தேவைக்காக காவல் உதவி மையம் 70 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வரும் அனைத்து வாகனங்களின் நம்பர்களை பதிவு செய்யக்கூடிய வகையில் கேமரா அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் பக்தர்களின் வழிகாட்டுதலுக்காக 32 இடங்களில் ஒலிபெருக்கி அமைக்கப்பட்டு 14 இடங்களில் உயர் கோபுரங்கள் மூலம் காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆங்காங்கே குடிநீர் தொட்டிகள், கழிவறை வசதிகளும் ஏற்பாடு செய்துள்ளனர்.