இன்று முதல் இரவு ஊடரடங்கு அமல் - மாநில அரசின் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி

omicronvirus ஒமைக்ரான் nightcurfew assamgovernment இரவு ஊடரடங்கு
By Petchi Avudaiappan Dec 25, 2021 10:54 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

அசாமில் இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

 தென்னாப்பிரிக்க நாட்டில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றின் அடுத்த உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ் தொற்று, இந்தியாவிலும் கால் பதித்துள்ளது. மஹாராஷ்டிரா, டெல்லி, தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, குஜராத், உத்தர பிரதேசம், கர்நாடா உள்ளிட்ட மாநிலங்களில் பரவி வருகிறது.

ஒமைக்ரான் வைரஸ் தொற்று டெல்டா வகை கொரோனா தொற்றுகளை விட மிகவும் ஆபத்தானது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், வடகிழக்கு மாநிலமான அசாமில், ஒமைக்ரான் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக அசாம் மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அதன்படி, இரவு 11:30 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும். எனினும், வரும் 31 ஆம் தேதி அன்று இரவு நேர ஊரடங்கு நடைமுறையில் இருக்காது.

அனைத்து அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள், ஹோட்டல்கள், சாலையோர உணவகங்கள், ஷோரூம்கள், குளிர்பதனக் கிடங்குகள் மற்றும் கிடங்குகள், மளிகைப் பொருட்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் கடைகள், பாலகங்கள், இரவு 10:30 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.

திரையரங்குகளில் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். பொது இடங்களில் முகக் கவசம் அணியாத நபர்களுக்கு 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒமைக்ரான் பரவலால் மஹாராஷ்டிரா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், ஹரியானா ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து அசாம் மாநிலத்திலும் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.