சிறுத்தையுடன் ஒரே அறையில் சிக்கிக்கொண்ட சிறுமி - 2 மணிநேர போராட்டத்திற்கு பின் உயிர்ப்பிழைத்த திடுக்கிடும் சம்பவம்
வடக்கு அசாம், சோனித்பூர் மாவட்டம், சோல்மாரி பகுதியில் 5 நபர்களை வேட்டையாடிய சிறுத்தையுடன் தனி அறையில் 15 வயது சிறுமி ஒருவர் சிக்கிக்கொண்டு சிறுத்தையுடன் போராடி உயிர்பிழைத்த திடுக்கிடும் சம்பவம் நடந்துள்ளது.
இரண்டு மணி நேரம் சிறுத்தையுடன் ஒரே அறையில் மாட்டிக்கொண்டு மரணத்தை அருகில் இருந்து பார்த்த நினைவுகளை பயத்துடன் கண்கள் கலங்க விவரிக்கிறார் சிறுமி ரேனு மாஜி.
தனியார் தொலைக்காட்சிக்கு இது குறித்து பேட்டியளித்துள்ள அந்த சிறுமி,
“கடந்த பிப்ரவரி 14-ந் தேதி காலை நாங்கள் எல்லோரும் சிறுத்தை ஊருக்குள் நுழைந்த செய்தி அறிந்து சிறுத்தையை காண வெளியில் வந்தோம்.
அன்றைய தினம் ஊர்மக்கள் அனைவருமே சிறுத்தையை தூரத்தில் இருந்து பார்க்க ஆவலுடன் இருந்தார்கள். அப்படி ஒரு வீட்டின் அருகில் நாங்கள் சென்றபோது எதிர்பாராத விதமாக சிறுத்தை எங்கள் அருகில் வந்துவிட்டது.
பயந்து அலறிய எங்களை கண்ட ஊர்மக்கள் சிறுத்தையிடம் சிக்கிக்கொள்ளாமல் இருக்க வீட்டினுள் செல்லும்படி அறிவுறுத்தினர். அதன்படி உள்ளே நானும் என்னுடன் இருந்த 7 பேரும் ஒரு அறைக்குள் சென்றோம்.
சிறுத்தை நாங்கள் இருந்த அறைக்குள் நுழைந்தவுடன் எல்லோரும் அலறி அடித்தபடி வெளியில் ஓடி அறையின் கதவை வெளியில் இருந்து தாழிட்டனர்.
நான் உள்ளே சிக்கிகொண்டதை யாரும் கவனிக்கவில்லை.
மரணத்தின் விலும்பில் இருந்த நான் அலமாரியின் பின்னே சென்று ஒலிந்துக்கொண்டேன். மெத்தையின் மேல் இருந்த சிறுத்தையிடம் சிக்கிக்கொள்ளாமல் இருக்க என்னால் கத்தி கூச்சலிடவும் முடியவில்லை.
நான் உள்ளே மாட்டிக்கொண்டேன் என்னை காப்பாற்றுங்கள் என கத்தி கூறமுடியாமல் நான் இருந்த இடத்திலேயே உரைந்து போனேன். எனக்கு தாகமாக இருந்தது, என் உதடுகள் உலர்ந்தன. நான் ஒரு மணி நேரம் ஒரு அங்குலம் கூட நகரவில்லை.
அதுவரை என் இருப்பை கவனிக்காத சிறுத்தையின் மீதே என் கண்கள் இருந்தன. திரைப்படங்களில் புலிகளும் சிறுத்தைகளும் மனிதர்களை கொன்று தின்னும் காட்சிகள் என் கண்முன் வந்து போனது.
அப்போது என் தோழி என்னை தொலைப்பேசியில் அழைத்தால் அவளிடம் நான் என் நிலையை விவரித்தேன். தகவல் அறிந்த ஊர்மக்கள் அறையின் மேல்பகுதியை உடைத்து ஏணியை கீழிறக்கினர்.
என்னால் நகர முடியவில்லை என்பதை உணர்ந்தேன். நான் எப்படியோ வலிமையையும் தைரியத்தையும் சேகரித்து ஏணியில் குதித்தேன்.
அந்த நேரத்தில், சிறுத்தை என்னை முறைத்துப் பார்த்தது. அங்கிருந்து என்னை மேலே இழுத்து காப்பாற்றினர்.” என முகத்தில் பீதியுடன் நடந்த சம்பவங்களை விவரித்தார் அந்த சிறுமி.
மேலும் நள்ளிரவில் அறைக்குள் இருந்த சிறுத்தையை அமைதிப்படுத்த வனத்துறையினர் பல முயற்சிகள் செய்தனர். பல மணிநேர போராட்டதிற்கு பிறகு கதவின் முன் வைக்கப்பட்டிருந்த கூண்டுக்குள் சிறுத்தை நகர்த்தப்பட்ட சிறைப்பிடிக்கப்பட்டது.
“என் வாழ்நாளில் இனி நான் சிறுத்தையையோ யானையையோ பார்க்கவே போகமாட்டேன்.
பாம்புகளை கண்டாலே பயந்து ஓடும் நான் சிறுத்தையுடன் ஒரு அறையில் பூட்டப்பட்டிருந்த சம்பவத்தை என் வாழ்நாளில் மீண்டும் நினைவுபடுத்த கூட விரும்பவில்லை.
அறைக்குள் இருந்த அந்த தருணத்தில், நான் என் பெற்றோரைப் பற்றி கவலைப்பட்டேன். என் தாயார் மனநிலை பாதிக்கப்பட்டவர், என் தந்தைக்கு உடல்நிலை சரியில்லை” என வேதனையுடன் தெரிவித்துள்ளார் ரேனு.