பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த காங்கிரஸ் தலைவர் - பொதுமக்கள் அதிர்ச்சி
காங்கிரஸ் முக்கிய நிர்வாகி ஒருவர் உல்ஃபா பயங்கரவாத இயக்கத்தில் இணைந்திருப்பது அசாமில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசாமில் ஜனார்த்தன் கோகோய் என்ற 30 வயது நபர் இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவராக இருந்து வருகிறார்.இவரது பெற்றோர் இருவருமே காங்கிரஸ் நிர்வாகிகளாக இருந்து வரும் நிலையில் கல்லூரி காலம் தொட்டே இளைஞர் காங்கிரஸில் இணைந்து பணியாற்றியதால் கடந்த ஆண்டு ஜனார்த்தன் அசாம் காங்கிரஸ் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இதனிடையே சமீப காலமாக கட்சி செயல்பாடுகளில் இருந்து விலகி இருந்த இவர், காங்கிரஸ் தலைமை குறித்து வெளிப்படையாக விமர்சனமும் செய்து வந்தார். இந்நிலையில் அசாமில் செயல்படும் உல்ஃபா இயக்கத்தில் தான் இணைந்து விட்டதாக ஜனார்த்தன் அறிவித்துள்ளார்.
தனது மனைவிக்கு இதுகுறித்து ஃபேஸ்புக்கில் தகவல் அனுப்பிய ஜனார்த்தன் அதில், அசாமீஸ் சமூகம் காலங்காலமாக வஞ்சிக்கப்பட்டு வருகிறது. அந்த சமூக மக்கள் அழிக்கப்பட்டு வருகின்றனர். எந்த அரசியல் கட்சியும் அவர்களுக்கு உதவ தயாராக இல்லை. அரசியல் கட்சிகளின் உண்மை முகம் எனக்கு தெரியும். அசாமீஸ் சமூகம் அழிவதை என்னால் வேடிக்கை பார்க்க முடியாது. அசாமீஸ் சமூகத்தை பாதுகாக்க உல்ஃபா இயக்கத்தில் இணைந்துள்ளேன். எனக்கு வேறு வழி தெரியவில்லை என கூறியுள்ளார்.
இந்த சம்பவம் அசாம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக அசாம் காவல்துறை தெரிவித்துள்ளது.