Asian Games: சிங்கப்பெண்ணே! தங்கம் வென்று அசத்திய இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!
19வது ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தங்கம் வென்றுள்ளது.
ஆசிய விளையாட்டு
19வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் (பைனல்) நேற்று நடைபெற்றது. இதில் இந்திய-இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது இந்திய அணி.
இதில் தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா 9 ரன்னில் ஆட்டம் இழந்தார். ஆனால் ஸ்மிர்தி மந்தனா மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோர் சிறப்பாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். சிறப்பாக ஆடி வந்த ஸ்மிர்தி 46 ரன்னில் ஆட்டம் இழந்தார். அதன் பிறகு வந்த ரிச்சா கோஷ் (9 ரன்), பூஜா வஸ்ட்ராகர் (2 ரன்) மற்றும் இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (2 ரன்) ஆகியோர் நிலைத்து நிற்காமல் ஆட்டமிழந்தனர்.
மறுமுனையில் நிலைத்து நின்று சவாலான ஸ்கோரை அடைவதற்கு உதவிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 42 ரன்னில் ஆட்டமிழந்தார். 20 ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 116 ரன்கள் குவித்தது. இலங்கை அணியில் பந்து வீசிய உதேஷிகா பிரபோதனி, சுகந்திகா குமாரி, இனோகா ரணவீரா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இந்தியா வெற்றி
இதனைத் தொடர்ந்து 117 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களம் இறங்கியது இலங்கை அணி. ஆனால் ஆரம்பமே 14 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது இலங்கை. இந்திய அணி சார்பாக இளம் வேகப்பந்து வீச்சாளர் திதாஸ் சாது சாய்த்து 3 விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.
இந்நிலையில் 20 ஓவர்களில் இலங்கை அணி 8 விக்கெட்டுக்கு 97 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்தியா 19 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தங்க பதக்கத்தை வென்றது. இந்தியாவிடம் தோல்வி கண்ட இலங்கை அணி வெள்ளிப்பதக்கம் பெற்றது.
முன்னதாக நடந்த 3வது இடத்துக்கான ஆட்டத்தில் வங்காளதேச அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வெறியேற்றி வெண்கல பதக்கத்தை தட்டிச் சென்றது.