ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இலங்கை அணி
ஆப்கானிஸ்தான் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி பெற்றது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகளில் முடிவடைந்த நிலையில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.
சூப்பர்4 சுற்றுக்கு வந்துள்ள 4 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழையும்.
இந்த நிலையில் சூப்பர் 4 சுற்று போட்டிகள் இன்று தொடங்கியது. இந்த முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்-இலங்கை அணிகள் மோதின.
இலங்கை த்ரில் வெற்றி
இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.
ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய ஹசரத்துல்லா ஷஷாய் 13 ரன்னில் அவுட்டானார். மற்றொரு தொடக்க வீரரான ரஹ்மதுல்லா குர்பாஸ் அதிரடியாக விளையாடி 45 பந்துகளில் 6 சிக்சர், 4 பவுண்டரி விளாசி 84 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் குவித்தது.இலங்கை அணியின் தில்ஷன் மதுஷகா அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணி தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். பின்னர் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற சூழல் அமைந்த நிலையில் குனதிலகா மற்றும் பனுகா ராஜபக்சா ஜோடி அதிரடியாக விளையாடியது.
குனதிலகா 20 பந்துகளில் 2 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 33 ரன்கள் குவித்தார். அதேபோல், 14 பந்துகளை சந்தித்த பனுகா ராஜபக்சா 1 சிக்சர், 4 பவுண்டரிகள் உள்பட 31 ரன்கள் குவித்து அவுட் ஆனார்.
இறுதியில் இலங்கை அணி 19.1 ஓவரில் 6 விக்கெட்டுகளை 179 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ஆப்கானிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை திரில் வெற்றிபெற்றது.