அர்ஷ்தீப் சிங்கிற்கு ஆதரவு - டுவிட்டரில் முகப்பு படத்தை மாற்றிய இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்...!

Cricket Indian Cricket Team Asia Cup 2022
By Nandhini Sep 05, 2022 03:55 PM GMT
Report

அர்ஷ்தீப் சிங்கிற்கு ஆதரவு தெரிவித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் உள்ள முகப்பு படத்தை இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் மாற்றியுள்ளார். 

பாகிஸ்தான் த்ரில் வெற்றி

நேற்று நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் மீண்டும் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

இப்போட்டியில், பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில், 19.5 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் 182 ரன்கள் குவித்தது. இதன் மூலம் இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தி திரில் வெற்றியை பெற்றது.

அர்ஷ்தீப் சிங் மீது குற்றச்சாட்டு

இந்திய அணியின் தோல்விக்கு மோசமான பந்துவீச்சும், பீல்டிங் சொதப்பல்கள் தான் முக்கிய காரணம் என்று சமூகவலைத்தளங்களில் கடுமையாக குற்றம் சாட்டப்படுகிறது. பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு கடைசி 3 ஓவரில் 34 ரன்கள் பாகிஸ்தான் வெற்றிக்கு தேவைப்பட்டது. அப்போது, ரவி பிஸ்னாய் வீசிய ஓவரில் ஆசிப் அலி கொடுத்த கேட்ச் வாய்ப்பை அர்ஷ்தீப் சிங் தவறவிட்டுவிட்டார். இதுதான் ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது. இதனால், சமூக வலைதளங்களில் அர்ஷ்தீப் சிங்கிற்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

Arshdeep Singh

ஹர்பஜன் சிங் டுவிட்

இந்நிலையில், இது குறித்து இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "யாரும் வேண்டுமென்றே கேட்சை கைவிடுவதில்லை. எங்கள் வீரர்களை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம்.. நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடியது. அர்ஷ்தீப் சிங் மற்றும் இந்திய அணி பற்றி கீழ்தரமாக விமர்சிக்கும் செயல் அவமானத்திற்குறியது. அர்ஷ்தீப் சிங் இந்தியாவுக்கு கிடைத்த தங்கம்" என்று ஹர்பஜன் சிங் பதிவிட்டுள்ளார்.

முகப்பு படத்தை மாற்றிய முன்னாள் கிரிக்கெட் வீரர்

இந்நிலையில் அர்ஷ்தீப் சிங்க்கிற்கு ஆதரவாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தனது டுவிட்டர் பக்கத்தின் முகப்பு படத்தை மாற்றியுள்ளார். அவர் டுவிட்டர் பக்கத்தில் அர்ஷ்தீப் சிங்கின் புகைப்படத்தை மாற்றியுள்ளார்.