அஷ்வினுக்கு டெஸ்ட் அணியில் கிடைக்கவுள்ள கௌரவம் - மகிழ்ச்சியில் ரசிகர்கள்
தென்னாப்பிரிக்காவுடனான தொடரில் தமிழக வீரர் அஸ்வினுக்கு இந்திய அணியில் புதிய பதவி கிடைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் மும்பையில் இந்திய வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வந்தனர்.
அப்போது அணியின் துணைக் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டதாகவும், இதனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து அவர் விலகியதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. அவருக்குப் பதிலாக பிரியன்க் பன்ச்சல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதனிடையே இந்திய அணியின் துணை கேப்டனாக யார் செயல்படுவார் என்ற பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. ஏற்கனவே ரஹானே அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டதால் மீண்டும் அவருக்கு அந்த பதவியை வழங்க மாட்டார்கள் என்பதனால் அடுத்ததாக அணியின் அனுபவ வீரரான தமிழக வீரர் அஷ்வினுக்கு அந்த பதவி வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
அதேசமயம் அணி நிர்வாகம் இளம் வீரர்களுக்கு துணை கேப்டன் பதவியை கொடுக்க நினைத்தால் ராகுல் அல்லது ரிஷப் பண்ட் ஆகிய இருவரில் ஒருவர் துணை கேப்டனாக நியமிக்கப்படுவார் என கூறப்படுகிறது.