விரைவில் சரண்டராகும் அசோக் குமார் - வழக்கறிஞர் தகவல்
சம்மன்கள் அனுப்பப்பட்டு நேரில் ஆஜராகாத நிலையில், இன்னும் ஓரிரு நாளில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் சரண்டராவார் என அவரது வழக்கறிஞர் தகவல் அளித்துள்ளார்.
செந்தில் பாலாஜி
இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜி, வரும் 28-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.அவரிடம் அமலாக்கத்துறை மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் அவர் மீது 3000 பக்க குற்றப்பத்திரிக்கை சென்னை முதன்மை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அசோக் குமார் எங்கே ?
இதற்கிடையில் தான், நான்கு முறை சம்மன் அனுப்பப்பட்ட போதும், செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் அமலாக்கத்துறையிடம் நேரில் ஆஜராகாமல் தலைமறைவாக இருக்கிறார். சில நாட்கள் முன்பு அவர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார் என கூறப்பட்ட நிலையில், அதனை முற்றிலுமாக அமலாக்கத்துறை மறுத்திருந்தது.
விரைவில் சரண்டர்
இந்த நிகழ்வுகளின் அடிப்படையில் தான் விரைவில் அசோக்குமார் அமலாக்கத்துறையிடம் சரணடைவார் என அவரது வழக்கறிஞர் தகவல் அளித்துள்ளார். அசோக்குமார் வழக்கறிஞர் கூறுகையில், எந்த வழக்கிற்காக சோதனை நடந்தது என்பதை குற்றப்பத்திரிகையில் பார்த்த பின்னர் சரண்டர் அடைவார் என்றார். அசோக்குமாரிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்திய பிறகே செந்தில் பாலாஜிக்கு பிணை கிடைக்கும் என தெரிகிறது.