ஹிஜாப் அணிந்ததற்காக முஸ்லிம் பெண்களை எப்படி தனிமைப்படுத்தி வைக்கலாம்? - அசாதுதீன் ஓவைசி ஆவேசம்
கர்நாடக மாநிலம் உடுப்பியில் அரசு பியு கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் சிலர் ஹிஜாப் அணிந்து வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சக மாணவ மாணவிகள் காவி துண்டு மற்றும் ஷால் அணிந்து போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் இந்திய அளவில் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள மற்ற கல்லூரிகளிலும் இந்த விவகாரம் எதிரொலிக்க தொடங்கி போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்தது.
மேலும் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வந்த மாணவிகளை வகுப்பறையில் தனியாக அமரவைத்த சம்பவங்களும் சில கல்லூரிகளில் அரங்கேறியது.
இதனால் போராட்டம் மேலும் பூதாகரமாக வெடித்தது.
ஒரு சில இடங்களில் கல்வி நிலையங்கள் மீது கல்வீச்சு சம்பவங்களும் ஏற்பட்டதால் மேலும் எந்த அசம்பாவிதங்களும் எற்படாமல் இருக்க
இன்று முதல் 3 நாட்களுக்கு கர்நாடகாவில் உள்ள அனைத்து உயர்நிலைப் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டார் மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை.
கர்நாடகத்தில் நடந்துவரும் இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், ஹிஜாப் அணிந்ததற்காக முஸ்லிம் பெண்களை எப்படி தனிமைப்படுத்தி வைக்கலாம்? என தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் எம்.பியும் ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவருமான அசாதுதீன் ஓவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “இது அரசியலமைப்பு சட்டத்தின்படி தனிமனித (அடிப்படை) உரிமை மீறல்; இது போன்ற செயல்கள் நாளுக்கு நாள் வலுவடைந்து வரும் நிலையில், இது வெறுப்பு அரசியலுக்கான ஒரு தெளிவான உதாரணம்.” என தெரிவித்துள்ளார்.