ஆர்யன் கான் வழக்கில் திடுக்கிடும் தகவல் : வழக்கை ,மறைக்க லஞ்சம் வாங்கப்பட்டதா

case aryankhan bribery drucks
By Irumporai Oct 24, 2021 11:51 PM GMT
Report

நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதை பொருள் பயன்படுத்திய வழக்கில்  போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் 25 கோடி ரூபாய் வரை லஞ்சம் கேட்டதாக  திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

 போதை பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்ட வழக்கில், தனிப்பட்ட சாட்சியமாக கோசாவி என்பவரும், அவரது உதவியாளர் பிரபாகர் செயில் என்பவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இவ்வழக்கு குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரபாகர் செயில், சிறையில் இருந்து ஆர்யன் கானை விடுவிக்க, நடிகர் ஷாருக் கானிடம் இருந்து 25 கோடி ரூபாய் வரை போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாக கூறியுள்ளார்.

மேலும், தன்னிடம் இருந்து பத்துக்கும் மேற்பட்ட வெற்று காகிதங்களில் கையெழுத்தும் வாங்கியிருப்பதாக தெரிவித்துள்ளார். சோதனை நடந்த இரவு, கோசாவியுடன் இணைந்து, போதை பொருள் தடுப்பு அலுவலகத்திற்கு சென்றதாகவும், அங்கு டிசோசா என்பவரை கோசாவி சந்தித்தாகவும் கூறியுள்ளார்.

அப்போது, ஆர்யன் கானை விடுவிக்க 25 கோடி ரூபாய் வரை பேரம் பேசி இறுதியில் 18 கோடி ரூபாய்க்கு முடிந்ததாகவும், அதில் எட்டு கோடி ரூபாய் போதை பொருள் தடுப்புப் பிரிவின் மும்பை மண்டல இயக்குநர் சமீர் வான்கடேவுக்கு வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

 ஆனால், அவரது இந்த குற்றச்சாட்டை போதை பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மறப்பு தெரிவித்து, இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என கூறியுள்ளனர்.

இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து பேசிய மகாராஷ்டிரா மாநில அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்திதொடர்பாளருமான நவாப் மாலிக், சொகுசு கப்பலில் இருந்து போதை பொருள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என்றும், போலியாக இவ்வழக்கு தொடரப்பட்டிருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

மேலும், பிரபாகர் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள் மிக முக்கியமானவை என்பதால், சிறப்பு புலனாய்வு குழு, இந்த விவகாரத்தை விசாரிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார் அதே போல் வெற்று காகிதங்களில் சாட்சியத்திடம் இருந்து கையெழுத்து பெற்றது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்திற்கு களங்கம் ஏற்படுத்தவே, இத்தகைய வழக்குகள் தொடரப்படுகிறது என்பது உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுவதாக அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவு கூறியுள்ளார்.

இந்த நிலையில் ஆர்யன் கான். ஜாமீன் மனு மீதான விசாரணையில் ஆர்யன் கானுக்கு நீதிமன்றம்  தொடர்ந்து ஜாமீன் மறுத்து வருவது  குறிப்பிடத்தக்கது.