"கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும்" - அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு
கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும் என்றும், அதன் மூலம் யாரும் தவறாகத் துன்புறுத்தப்பட்டுவிடக்கூடாது என்றும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் வருகிற பிப்ரவரி 10-ம் தேதி தொடங்குகிறது.
தேசிய அளவில் 5 மாநில தேர்தல் குறித்த எதிர்பார்ப்பு தீவிரமாக உள்ள நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், பஞ்சாபில் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் ஆம் ஆத்மி தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
அந்தவகையில், ஜலந்தரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், “மதம் என்பது தனிப்பட்ட விஷயம். கட்டாய மத மாற்றங்களுக்கு எதிராகக் கண்டிப்பாகச் சட்டம் இயற்றப்பட வேண்டும்,
ஆனால் இதன் மூலம் யாரும் தவறாகத் துன்புறுத்தப்படக் கூடாது.
ஒருவரை அச்சுறுத்தி மதமாற்றம் செய்வது தவறானது. அதைத் தடுக்கும் வகையிலேயே சட்டம் இயற்றப்பட வேண்டும். ஒவ்வொருவருக்கும் அவரவர் விருப்பப்படி வழிபட உரிமை உண்டு” என்று தெரிவித்துள்ளார்.