ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தாக்கல் - எகிறும் எதிர்பார்ப்பு!
ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்துள்ளது.
ஜெயலலிதா மரணம்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் 2017 செப்டம்பர் மாதம் விசாரணை அமைக்கப்பட்டது.
மூன்று மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட நிலையில், 14 முறை ஆணையத்திற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டது. ஆணையம் சார்பாக 151 பேரிடமும், தங்களை விசாரிக்க வேண்டும் என்று மனு செய்த 7 பேரிடம் ஆணையம் விசாரணையை நடத்தியது.
மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல்
இதில் ஜெயலலிதாவின் பாதுகாவலர்கள், ஜெயலலிதாவின் உறவினர்கள், சசிகலாவின் உறவினர்கள், ஐஏஎஸ் - ஐபிஎஸ் அதிகாரிகள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், காவல்துறை உயரதிகாரிகள், போயஸ் கார்டனில் பணி செய்தவர்களிடம் ஆணையம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பெற்றது.
இதை தொடர்ந்து ஆகஸ்ட் 4 ஆம் தேதி 7 பேர் கொண்ட எய்ம்ஸ் மருத்துவக் குழு தனது 3 பக்க அறிக்கையை ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு கொடுத்துள்ளது.அதில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் எந்த ஒரு தவறும் நடைபெறவில்லை என்று கூறியுள்ளது.
இந்நிலையில் 600 பக்கங்களைக் கொண்ட அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தாக்கல் செய்தார்.