பிரியாணி கடை வியாபாரியை தாக்கிவிட்டு பணத்தை பறித்து சென்ற 3 பேர் கைது
மதுரவாயல் பிரியாணி கடைக்காரரிடமிருந்து பணத்தை பறித்து சென்ற 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரவாயல் அருகே ஆலப்பாக்கத்தில் பிரியாணி கடையை நடத்தி வருபவர் ஷகாபுதின் (46). இவர் வழக்கம்போல் நேற்று இரவு கடையில் பிரியாணி விற்று முடித்துவிட்டு மெட்ரோ நகர் 3 வது தெரு வழியாக வீட்டிற்கு நடந்து வந்துக் கொண்டிருந்தார்.
அப்போது, பைக்கில் வந்த 3 பேர் அவரை முகத்தில் தாக்கி விட்டு அவரிடம் இருந்த 1 செல்போன், 2 ஆயிரம் பணம், 3.5 கிராம் தங்க மோதிரம் ஆகியவற்றை பறித்து சென்றனர். அது தொடர்பாக மதுரவாயல் காவல் நிலையத்தில் ஷகாபுதின் புகார் அளித்தார்.
அதனடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பாலாஜி (25), ஹரிபிரசாத் (19) மற்றும் சதீஸ்குமார் (19) ஆகிய 3 பேர் என தெரியவந்தது.

இதனையடுத்து, அந்த மூவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஷகாபுதினிடம் பறித்து சென்ற நகை, செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் பிரியாணி விற்ற பணம் ரூ. 2 ஆயிரத்தை செலவு செய்துவிட்டதாக குற்றவாளிகள் கூறவே மூவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்துள்ளனர்.