காஷ்மீரில் உயிரிழந்த தமிழர்: ராணுவ மரியாதையுடன் சொந்த ஊரில் இன்று நல்லடக்கம்
காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு பணியில் இருந்த போது தீ விபத்தில் வீரமரணமடைந்த ராணுவ வீரரின் ஆறுமுகத்தின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. தேனி மாவட்டத்தின் வடுகபட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது 38), கடந்த 18 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி பாண்டிராணி(வயது 32), இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகனும், 2 வயதில் ஒர மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, தீ விபத்தில் காயமடைந்தார்.
உடனடியாக ஆறுமுகத்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்த போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் சொந்த ஊரான வடுகபட்டிக்கு கொண்டு வரப்பட்டது, அங்கு பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அப்போது, அவரது உடலுக்கு ஆயிரக்கணக்கான கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து, இன்று காலை சுமார் 8.30 மணியளவில் ஆறுமுகத்தின் உடல் ராணுவ வாகனம் மூலம் மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் மற்றும் மாவட்ட எஸ்.பி., சாய்சரண் தேஜஸ்வி ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செழுத்தினர்.
அதனை தொடர்ந்து, ராணுவ மரியாதையுடன் 21 துப்பாக்கிகுண்டுகள் முழங்க ஆறுமுகத்தின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.