கோபா அமெரிக்கா கால்பந்து: அர்ஜென்டினா இறுதிப்போட்டிக்கு தகுதி
கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியின் அரைஇறுதியில் அர்ஜென்டினா அணி கொலம்பியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
47வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசில் நாட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 2-வது அரைஇறுதி ஆட்டத்தில் 14 முறை சாம்பியனான அர்ஜென்டினா அணி, முன்னாள் சாம்பியன் கொலம்பியாவை எதிர்கொண்டது.
ஆரம்பம் முதலே ஆட்டம் பரபரப்பாக நகர்ந்த நிலையில் 7வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணி கோல் அடித்தது. ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை பெறவெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் பெனால்டி ஷூட்-அவுட் முறை கொண்டு வரப்பட்டது.
இதில் அர்ஜென்டினா அணியின் கோல்கீப்பர் எமிலியானோ மார்ட்டினஸ் அபாரமாக செயல்பட்டு அணியின் வெற்றியை உறுதி செய்தார். பெனால்டி ஷூட்-அவுட்டில் அர்ஜென்டினா அணி 3-2 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது.
அர்ஜென்டினா தனது கடைசி 19 ஆட்டங்களில் தோல்வியே சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை மறுநாள் ரியோடிஜெனீரோவில் நடைபெறும் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா, நடப்பு சாம்பியன் பிரேசிலுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.