‘நீங்க கர்ப்பிணியா? அப்போ இந்த வேலைக்கு தகுதி கிடையாது..’ - சர்ச்சையில் மாட்டிய SBI - வலுக்கும் கண்டனங்கள்
சமீபத்தில் பாரத ஸ்டேட் வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில், பெண்களின் பணி நியமனத்திற்கான வழிகாட்டுதலைத் திருத்தி வெளியிட்டது.
அதில், 3 மாதங்கள் அல்லது அதற்கு மேலான கர்ப்பிணிகள் பணி சேர்க்கைக்கு தற்காலிகமாக்கத் தகுதி கிடையாது என்றம், அவர்களுக்கு பதவி உயர்வும் வழங்கப்படக்கூடாது என்றும் பாரத ஸ்டேட் வங்கி தனது புதிய வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிட்டு வெளியிட்டது.
மேலும், அந்த கர்ப்பிணிகள் குழந்தை பிறந்து 4 மாதங்கள் கழித்து தான் மீண்டும் பணிக்கு வர வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிபபிட்டிருந்தது. குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில், எஸ்பிஐ-ன் இந்த புதிய நெறிமுறைகள் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்து அனைத்திந்திய ஜனநாயக மகளிர் சங்கம் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், எஸ்பிஐயின் இந்த செயலானது பாரபட்சமானது எனவும் இந்த உத்தரவு மகப்பேறு சலுகைகளைப் பாதிக்கும் எனவும் அதில் குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்திருந்தது.
மேலும் இந்த உத்தரவை பிறப்பித்தவர்களின் பட்டியலை சமர்ப்பிக்குமாறும் அனைத்திந்திய ஜனநாயக மகளிர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
மேலும், இது குறித்து அமமுக பொதுச்செயலாளர் தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறுகையில், ‘தாயைப் புனிதமாக வணங்கும் நம் நாட்டில், அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி இப்படி அறிவித்திருப்பது தாய்மையை இழிவுபடுத்தும் செயல். எனவே, பெண்ணுரிமையை மதித்து இந்த உத்தரவை SBI திரும்பப் பெற வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், தற்போது எஸ்பிஐ-ன் இந்த உத்தரவு பாலின சமத்துவத்திற்கு எதிராக இருப்பதால் இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்று எம்.பி. சு.வெங்கடேசன் தனது கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்.
இதனையடுத்து பல எதிர்ப்புகள் எழுந்தாலும், எஸ்பிஐ தரப்பிலிருந்து இன்னும் எந்த பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
