கூவாகம் கிராமத்தையே உலுக்கிய தாலியறுப்பு நிகழ்வு: ஆயிரங்கணக்கான திருநங்கைகள் கதறல்!
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள கூவகம் கிராமத்தில் ஆண்டுதோறும் 18 நாட்கள் நடைபெறும் கூவாக திருவிழாவின் இறுதி நாள் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
மகாபாரதக் கதையின் அடிப்படையில், பாண்டவர்களின் வெற்றிக்காக தன்னைத் தானே பலிகொடுக்க முன்வந்த அரவானின் கடைசி ஆசையை நிறைவேற்றும் விதமாக, நேற்று இரவு திருநங்கைகள் மணப்பெண் கோலத்தில் பூசாரிகளின் கையால் தாலி கட்டிக் கொண்டனர்.

விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கிராமத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியான அரவான் பலியிடும் ஐதீக நிகழ்வு இன்று நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான திருநங்கைகள் தாலியை அறுத்து, ஒப்பாரி வைத்து தங்கள் துயரத்தை வெளிப்படுத்திய காட்சி காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
கடந்த 18 நாட்களாக நடைபெற்ற இந்த விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.
இரவு முழுவதும் கும்மியடித்து ஆடி மகிழ்ந்த திருநங்கைகள் இன்று அரவான் பலியிடப்பட்டதைத் தொடர்ந்து துயரத்தில் மூழ்கினர். குறித்த நிகழ்வு ஆண்டு தோறும் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.