அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு திமுகவில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தார் நடிகர் போஸ் வெங்கட்
தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் தங்களது உறுப்பினர்களிடம் விருப்ப மனுக்களை பெற்று வருகின்றன. சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ள திமுகவினர் பிப்ரவரி 17-ம் தேதி முதல் வருகின்ற 24 -ம் தேதி வரை விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து அளிக்கலாம் என்றும் அதற்கு ரூ.25,000 கட்டணமாக செலுத்த வேண்டும் என்றும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்திருந்தார்.
அதனையடுத்து, விருப்பமனு வினியோகம் தற்போது சூடுபிடித்திருக்கிறது. 5-வது நாளான இன்று வரை 4,100 மனுக்கள் தற்போது வரை வினியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும், 500க்கும் மேற்பட்ட விருப்ப மனுக்கள் கட்சித் தலைமையிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், நடிகரும், இயக்குநருமான போஸ் வெங்கட் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு விருப்ப மனுவை தாக்கல் செய்திருக்கிறார். இது குறித்து பேசிய போஸ் வெங்கட், “தொடர்ச்சியாக பல்வேறு காரணங்களால் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி கூட்டணி கட்சிகளுக்கு சென்ற நிலையில் இந்த முறை அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியை திமுகவிற்கு ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கின்றோம்.
ஒருவேளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எனக்கு வாய்ப்பு அளித்தால் நிச்சயமாக அறந்தாங்கி தொகுதியில் வெற்றி அடைவேன். நான் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் அந்த ஐந்து ஆண்டுகளும் சினிமாவில் நடிக்க மாட்டேன். சென்னைக்கு வரமாட்டேன், தொகுதிக்காக முழுமையாக பாடுபடுவேன்” என்றார்.