அரக்கோணம் இரட்டை கொலை - குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி!
அரக்கோணம் அருகே உள்ள சோமனூர் காலனியில் கடந்த 6ம் தேதி தேர்தல் முன்விரோதம் காரணமாக அர்ஜுனன், சூர்யா என்ற இரண்டு இளைஞர்கள் கொலை செய்யப்பட்டார்கள். படுகாயமடைந்த 3 பேர் திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அப்பகுதியின் அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் பழனி என்பவரது மகன் சத்யா தலைமையில் இந்த கொலை நடத்தப்பட்டிருக்கும் நிலையில், பாமகவினருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது. தேர்தல் முன்விரோதம் காரணமாக இளைஞர்கள் கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 6 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த கொலை சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டன குரல் எழுப்பியுள்ளனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் இன்று சென்னையில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது.

இதனையடுத்து, கொலை செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4.12 லட்சம் நிவாரண நிதியுதவியும் மற்றும், மாத உதவித்தொகையாக ரூ.5,000 வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.
அதன் படி, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் நிவாரண காசோலையை அவர்களது குடும்பத்தினரிடம் வழங்கினார். தேர்தல் முன்விரோத வழக்கில் படுகாயமடைந்த நபர்களின் குடும்பத்தினருக்கும் ஒரு 1 லட்சம் காசோலை வழங்கப்பட்டுள்ளது.