டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு - இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

TNGovernment TNPSC group4exam
By Petchi Avudaiappan Mar 30, 2022 05:32 AM GMT
Report

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என   தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. 

தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் கீழ் தமிழ்நாடு அரசுப் பணிகள் பெரும்பாலானவற்றுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டு தமிழக அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 7,382 பணியிடங்களை  நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலச்சந்திரன் சில தினங்களுக்கு முன் தெரிவித்திருந்தார். 

தேர்வு காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறும் எனவும், மொத்தமுள்ள 300 மதிப்பெண்களில் 90 பெற்றால் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. கேட்கப்படும் 200 கேள்விகளில் 100 கேள்விகள் தமிழ் மொழி தொடர்பானதாவும், 75 கேள்விகள் பொது அறிவு தொடர்புடையதாகவும் இருக்கும். 

இந்தத் தேர்வின் முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குரூப் 4 தேர்வுக்கு மார்ச் 30 ஆம் தேதி முதல் ஏப்ரல் 28 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. எனவே போட்டித் தேர்வுக்கு தயாராகுபவர்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தை அணுகி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். 

குரூப் 4 தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஒ), டைபிஸ்ட், ஸ்டேனோ டைபிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படுவது குறிப்பிடத்தக்கது.