உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை வழங்கிய அமெரிக்கா - எவ்வளவு கோடி தெரியுமா?
உக்ரைனுக்கு மேலும் ரூ.26 கோடிக்கு ராணுவ உதவிகளை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்திருக்கிறது.
உக்ரைன் தற்போது நேட்டோ கூட்டமைப்புடன் சேர்வதற்கான அனைத்து பணிகளையும் செய்து வருகிறது. இதனால் தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என கூறி ரஷ்யா உக்ரைன் மீது 3வது நாளாக போர் தொடுத்து வருகிறது.
வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலில் ஏராளமான பாதுகாப்பு படை வீரர்கள், பொதுமக்கள் பலியாகியுள்ளனர். உக்ரைனும் தங்கள் நாட்டைக் காக்க பதிலடி கொடுத்து வருவதால் அங்கு உச்சக்கட்ட பதற்றம் நிலவுகிறது.
உக்ரைனின் தலைநகர் க்யூவை ரஷ்ய படைகள் நெருங்கி வருவதால் போர் தீவிரமடைய தொடங்கியுள்ளது. இதனிடையே உக்ரைனுக்கு அமெரிக்கா ஏற்கனவே ரூ.4,500 கோடி, ரூ.18 ஆயிரம் கோடி பண உதவி வழங்க ஒப்புதல் அளித்திருந்தது.
இந்நிலையில் உக்ரைனுக்கு மேலும் ரூ.26 கோடிக்கு ராணுவ உதவிகளை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ரஷ்யாவால் நியாயப்படுத்தமுடியாத போரை எதிர்த்து உக்ரைனுக்கு உதவ இந்த ராணுவ உதவிகள் வழங்கப்படுவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் கூறியுள்ளார்.