சனாதன விவகாரம்....உதயநிதி மீது டெல்லியில் மேலும் ஒரு வழக்கு
சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருக்கும் கருத்துக்களை பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், டெல்லி காவல் நிலையத்தில் மேலும் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சனாதன சர்ச்சை
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சில தினங்கள் முன்பு தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசும் போதும், டெங்கு, மலேரியா போல இந்த சனாதனமும் ஒழிக்கப்பட வேண்டும் என அதிரடியாக கருத்து தெரிவித்திருந்தார்.
பாஜகவினர் இதற்கு கடுமையாக எதிர்ப்புகள் தெரிவித்து வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ராஜஸ்தான் மாநிலத்தின் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட இதனை கடுமையாக விமர்சித்திருந்தார்.
மேலும் ஒரு வழக்கு
இந்நிலையில், தற்போது தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது மேலும் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. டெல்லி காவல் நிலையத்தில் சனாதன கருத்துக்கள் மூலம் மத உணர்வுகளை புண்படுத்தியதாக உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கறிஞர் அமிதா சச்தேவா புகார் அளித்திருக்கிறார்.
முன்னதாக வழக்கறிஞர் வினீத் ஜிண்டால், உதயநிதியின் கருத்து வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி, டெல்லி போலீஸ் கமிஷனர், வடமேற்கு போலீஸ் கமிஷனர் மற்றும் டெல்லி போலீஸ் சைபர் செல் ஆகியவற்றில் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.