நீட் மரணங்களில் A 1 ஸ்டாலின், A 2 உதயநிதி...அண்ணாமலை அதிரடி
நீட் தேர்வில் 18 தற்கொலைகள் நடந்துள்ளது என்றால் தற்கொலைக்கு தூண்டியதாக திமுகவினர் மீது தான் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நீட் விவகாரம்
தமிழகத்தின் மாவட்ட தலைநகரங்களில் இன்று ஒரு நாள் திமுக சார்பில் நீட் தேர்வை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. கட்சியின் மூத்த தலைவர்கள், முக்கிய அமைச்சர்கள் என பலரும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
அண்ணாமலை கண்டனம்
இந்நிலையில், இன்று நெல்லை மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
நீட் தேர்வில் 18 தற்கொலைகள் நடந்துள்ளது என்றால் தற்கொலைக்கு தூண்டியதாக திமுகவினர் மீது தான் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என குற்றம்சாட்டிய அண்ணாமலை, அதில் முதல் குற்றவாளியாக ஸ்டாலினும், 2வது குற்றவாளியாக உதயநிதி ஸ்டாலினும் தான் இருக்க வேண்டும் என விமர்சனம் செய்தார்.
திமுக மீது தான் வழக்கு போடவேண்டும்
ஒன்றும் இல்லாத நீட் தேர்வை திமுகவினர் தூண்டி தூண்டி உணர்ச்சிப்பூர்வமாக மாற்றி உள்ளனர் என்று கூறி, இந்தியாவில் நீட் தற்கொலை நடக்காதபோது திமுக எதிர்க்கட்சியாக இருந்தது முதல் இப்போது வரை தமிழகத்தில் தற்கொலை நடக்கிறது என்றால் அவர்கள் மீது தான் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
வரும் நாட்களில் இன்னொரு மாணவன் தற்கொலை செய்து கொண்டால் அது நடக்ககூடாது என கடவுளை வேண்டிக்கொள்கிறேன் என்று தெரிவித்த அண்ணாமலை, ஒருவேளை தற்கொலை நடந்தால் நீட் குறித்து விதண்டாவாதமாக பேசும் திமுக அமைச்சர்கள் மீது தான் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும்'' என குற்றம்சாட்டினார்.