செய்தி வெளியிட்டதற்கு வழக்கா..? அடக்குமுறையை கையாளும் திமுக..! அண்ணாமலை கண்டனம்!
ராமர் கோவில் திறப்பு நிகழ்ச்சியை ஒளிபரப்ப கூடாது என வாய்மொழியாக திமுக அரசு உத்தரவிட்டதை குறித்து செய்தி வெளியிட்டதற்கு தனியார் நாளிதழ் ஆசிரியர் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலை கண்டனம்
இது குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், அயோத்தி ஶ்ரீராமர் கோவில் பிராணப் பிரதிஷ்டை நிகழ்ச்சியை, தமிழகக் கோவில்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய,
திமுக அரசு தடை செய்து வாய்மொழியாக உத்தரவிட்டதை, தனியார் நாளிதழ் செய்தியாக வெளியிட்டது. இதனை அடுத்து, தினமலர் நாளிதழ் உரிமையாளர் மற்றும் ஆசிரியர் மீது, மதுரை காவல்துறை வழக்கு தொடர்ந்துள்ளது.
அறநிலையத் துறை அதிகாரிகள் இந்தத் தடை குறித்து தொலைபேசியில் பேசிய ஆதாரங்கள், கோவில்களுக்கு வந்த பக்தர்களைத் தடுத்த செய்திகள் என பல ஆதாரங்கள் உள்ள நிலையிலும், திமுக அரசின் இந்த நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
அராஜகம்...
செய்திகளை மக்களுக்குக் கொண்டு செல்வது ஊடகங்களின் உரிமை மட்டுமல்ல, கடமையும் கூட. அனைத்து ஊடகங்களும் தங்களுக்கு ஆதரவாகச் செயல்பட வேண்டும் என்று திமுக எதிர்பார்ப்பது வேடிக்கை.
அயோத்தி ஶ்ரீராமர் கோவில் பிராணப் பிரதிஷ்டை நிகழ்ச்சியை, தமிழகக் கோவில்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய, திமுக அரசு தடை செய்து வாய்மொழியாக உத்தரவிட்டதை, @dinamalarweb நாளிதழ் செய்தியாக வெளியிட்டது. இதனை அடுத்து, தினமலர் நாளிதழ் உரிமையாளர் மற்றும் ஆசிரியர் மீது, மதுரை காவல்துறை வழக்கு…
— K.Annamalai (@annamalai_k) January 25, 2024
அடக்குமுறையைக் கையாளும் திமுக அரசு, பொதுமக்களின் ஒட்டுமொத்த வெறுப்பையும் சம்பாதித்துக் கொண்டிருக்கிறது. ஊடகச் சுதந்திரத்துக்கு எதிராகச் செயல்படும் திமுக அரசின் இது போன்ற அராஜகங்கள் நீண்ட நாட்களுக்கு செல்லுபடியாகாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.