அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் உடன் அண்ணாமலை சந்திப்பு
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில் கடந்த 4ம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு திருமகன் ஈவெரா காலமானார்.
இதனிடையே இந்த தொகுதிக்கு பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஈரோடு கிழக்கு தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில் அத்தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.
இதே போன்று அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி அணியின் சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தென்னரசும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் செந்தில் முருகன் போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா, தேமுதிக சார்பில் ஆனந்தன் உள்ளிட்டோரும் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர்.
இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களை சந்தித்து கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
எடப்பாடி பழனிசாமியுடன் அண்ணாமலை சந்திப்பு
இந்த நிலையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை அவரது அலுவலகத்தில் சந்தித்து இபிஎஸ் அணியினரும், ஓ.பன்னீர்செல்வம் நேரடியாக சந்தித்து ஆதரவு கோரியிருந்தனர்.
பாஜக சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டால் தங்கள் தரப்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளரை திரும்ப பெறுவோம் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்து இருந்தார்.
இரண்டு தரப்பும் ஆதரவு கோரியிருந்த நிலையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றார்.

இந்த நிலையில் சென்னை கீரின்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சி.டி.ரவி உள்ளிட்டோர் சந்தித்து பேசினர்.
