தகுதியே இல்லாத அண்ணாமலை...தன்மானத்தை விட்டுக்கொடுக்க முடியாது...எஸ்.பி.வேலுமணி
ஜெயலலிதா,அண்ணா,பெரியார் போன்ற தலைவர்களை குறித்து பேச அண்ணாமலைக்கு தகுதி இல்லை என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துளளார்.
விஷயம் தெரியாமல் பேசும் உதயநிதி
கோவை மாவட்டத்தில் அதிமுகவின் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பங்குபெற்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கட்சி நிர்வாகிகளிடம் உரையாற்றினார்.
திமுக ஆட்சி போக வேண்டும் என்று கூறிய அவர், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வர வேண்டும் என மக்கள் முடிவு செய்து விட்டனர் என சுட்டிக்காட்டி மதுரை மாநாட்டிற்கு செல்ல உணவு கூட வேண்டாம் என்றும் வண்டி தயார் செய்து தந்தால் போதும் என தொண்டர்கள் எழுச்சியுடன் வந்தனர் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் எந்த மக்களும் நன்றாக இல்லை என குற்றம்சாட்டி, மதுரை மாநாட்டை பார்த்து திமுகவினர் பயந்து விட்டனர் என்று கூறி மாநாட்டை பற்றி தெரியாமல் உதயநிதி ஸ்டாலின் பேசி வருகிறார் என விமர்சனம் செய்தார்.
தன்மானத்தை விட்டு தர முடியாது
மேலும், தங்களுக்கு ஒரே தலைவர் எடப்பாடி பழனிசாமி தான் என உறுதிபட கூறிய எஸ்.பி.வேலுமணி, எடப்பாடி பழனிசாமி கருத்தே தங்களது கருத்து என்றும் வேலுமணி, தங்கமணி பாஜக பற்றி பேசவில்லை என சிலர் சொல்கிறார்கள் என விமர்சித்து கூட்டணிக்காக தன்மானத்தை விட்டு தர மாட்டோம் என்றார்.
அண்ணாமலையின் விமர்சனம் குறித்து பதில் தெரிவித்த அவர், அண்ணாமலை கூட்டணியில் இருந்து கொண்டு இப்படி பேச கூடாது என சுட்டிக்காட்டி, ஜெயலலிதா, அண்ணா, பெரியார் பற்றி பேச அண்ணாமலைக்கு தகுதியில்லை என கடுமையாக விமர்சித்து, அண்ணா மன்னிப்பு கேட்டதாக உண்மைக்கு புறம்பான விஷயங்களை அண்ணாமலை பேசியிருக்க கூடாது என்றார்.
இது, ஒரு தலைவருக்கு அழகல்ல என்றும் அண்ணாமலை உண்மைக்கு புறம்பாக பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என கூறி, எடப்பாடி பழனிசாமி சொன்னால் கிணற்றில் கூட குதிப்போம் என தெரிவித்தார்.