அண்ணாமலை போட்டியிடும் தொகுதி? விரைவில் வெளியாகும் அறிவிப்பு
தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026 ஏப்ரல் 23ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வேட்பாளர்கள் அறிவிப்பு, வேட்பு மனுத்தாக்கல், பிரசாரம் என அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது.
கடந்த மாதம் 30ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறுகிறது, இந்நிலையில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.
தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக-வுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இதில் பாஜக வெற்றிக்கு சாதகமில்லாத தொகுதிகளை ஒதுக்கியுள்ளதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் தொடர் ஆலோசனைகளால் வேட்பாளர் அறிவிப்பு தாமதமாகிறது, இச்சூழலில் சென்னை கமலாலயத்தில் நடந்த கூட்டத்தில் ஒவ்வொரு தொகுதிக்கும் இரண்டு அல்லது மூன்று வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டு அதுகுறித்த தகவல்கள் மத்திய தலைமைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன்படி மயிலாப்பூரில் தமிழிசை செளந்திரராஜன், அவிநாசியில் எல். முருகன், கோவை வடக்கு தொகுதியில் வானதி ஸ்ரீனிவாசன் ஆகியோர் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

முன்னாள் தலைவரான அண்ணாமலை எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பது இதுவரை உறுதிசெய்யப்படவில்லை.
சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம் தொகுதியை அண்ணாமலை தெரிவு வைத்திருந்த நிலையில் அதிமுக அத்தொகுதிகளை பாஜக-வுக்கு ஒதுக்கவில்லை, இதனால் கடும் அதிருப்தி அடைந்த அண்ணாமலை தான் போட்டியிடவில்லை என திட்டவட்டமாக கூறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் அண்ணாமலையை போட்டியிடவைக்க பாஜக தலைமை விரும்புவதாகவும், அதுகுறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே இன்று மாலை அல்லது நாளை பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகலாம் என கூறப்படுகிறது.