“பொய்யை மட்டும் மூலதனமாக வைத்து அரசியல் செய்கிறது, தி.மு.க.வை வீழ்த்த தீவிர பிரசாரம் செய்வோம்” - அண்ணாமலை
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கு பிப்ரவரி 19-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்து தங்கள் கட்சியை சேர்ந்த வேட்பாளர்களுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு திரட்டி வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.
அப்போது மக்கள் மத்தியில் பேசிய அவர்,
“நீட் தேர்வு விவகாரத்தில் தி.மு.க. மாணவர்களின் நலனை விரும்பவில்லை. பொய்யான தகவல்களை தெரிவித்து மக்களை ஏமாற்றி வருகிறது.
கடந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். மற்றும் பல் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு தகுதியுடைய 24, 949 விண்ணப்பதாரர்களில் 14,618 பேர் நீட் கோச்சிங் செல்லாதவர்கள்.
அதாவது தகுதிபெற்ற மாணவர்களில் 59 சதவீதம் பேர் நீட் கோச்சிங் செல்லாதவர்கள் இந்த புள்ளி விபரங்கள் மருத்துவ துறையில் உள்ளது.
ஆனால் 99 சதவீதம் பேர் நீட் கோச்சிங் பெற்றவர்கள் தான் தகுதி பெற்றதாக தி.மு.க. பொய்யான தகவல்களை கூறிவருகிறது.
மக்கள் நலனை மறந்துவிட்டு பொய்யை மட்டும் மூலதனமாக வைத்து அரசியல் நாடகத்தை நடத்தி வரும் தி.மு.க.வை வீழ்த்த தீவிர பிரசாரம் செய்வோம்.
தி.மு.க. கூறி வரும் ஒவ்வொரு பொய்களையும் தகர்த்தெறிவோம்.” என கூறினார்.