அமைச்சர்கள் வீட்டு பிள்ளைகள் படிப்பது மும்மொழி; அவர்களுக்கு அறிவில்லையா? அண்ணாமலை சாடல்
அமைச்சர்கள் வீட்டு பிள்ளைகள் படிப்பது மும்மொழிதான் என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
பிடிஆர் கருத்து
தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையை சிறப்பாக பின்பற்றும்போது திடீரென மும்மொழிக் கொள்கைக்கு மாற வேண்டும் என்றால், அறிவுள்ளவர்கள் யாராவது ஏற்றுக் கொள்வார்களா?
சில மாநிலங்களில் ஒரு மொழிக் கொள்கையைக்கூட நிறைவேற்ற முடியாத சூழல் உள்ளது. சக்சஸான மாடலை எடுத்துவிட்டு, பெயிலியரான மாடலைப் பின்பற்ற வேண்டும் என்று சொன்னால் அறிவுள்ளவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சையே இந்தி தெரியாது என சொல்கிறார்.
அதனால் ஏதாவது பிரச்சனை வந்ததா? அவருக்கு ஏதாவது பாதிப்பு வந்ததா? என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியிருந்தார். இந்நிலையில், தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இதுகுறித்து பேசுகையில்,
அண்ணாமலை சாடல்
"அவரது மகன் இந்தியக் குடிமகனா..? அல்லது அமெரிக்க குடிமகனா..? என்பதை தெளிவுபடுத்த வேண்டும். பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் மகன் மூன்று மொழி சொல்லிக் கொடுக்கக்கூடிய பள்ளியில்தான் படிக்கிறார். அதனால் பி.டி.ஆருக்குத்தானே அறிவில்லை என்று அர்த்தம்.
தமிழகத்தில் உள்ள அனைத்து அமைச்சர்களின் குழந்தைகள், பேரக்குழந்தைகள் மூன்று மொழி சொல்லிக் கொடுக்கக்கூடிய பள்ளிகளில்தான் படிக்கிறார்கள். தமிழகத்தில் தமிழ் மொழியை விட ஆங்கில மீடியத்தில்தான் அதிகமாக படிக்கிறார்கள். இதனால் தமிழ் மீடியம் 27 சதவிகிதம் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
ஆனால், தேசிய கல்விக் கொள்கையில் தமிழ் மொழியை ஊக்குவிக்கிறோம். அமைச்சர்கள் அன்பில் மகேஸ், பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் இது குறித்து சிந்திக்காதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.