அடுத்த பொதுத்தேர்தலில் போட்டி - அண்ணாமலை அறிவிப்பு
தமிழ்நாட்டில் நடக்க உள்ள அடுத்த தேர்தலில் போட்டியிடப்போவதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.
அண்ணாமலை தனிக்கட்சி அறிவிப்பு
தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவராக இருந்த அண்ணாமலை, டெல்லி சென்று பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை சந்தித்து தனது நிலைப்பாடு குறித்து விளக்கி 5 பக்க ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார்.
தற்போது அவரது ராஜினாமா ஏற்கப்பட்டுள்ள நிலையில், தனது புதிய கட்சி குறித்து நேரலையில் பேசி வருகிறார்.

இதில் பேசிய அவர், "ஒரு புதிய அரசியலை, அடிப்படை கட்டமைப்பை மாற்றக் கூடிய அரசியலை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பாஜகவில் இருந்து ராஜினாமா செய்தேன். சொல்லிவிட்டு விலகுவதே தமிழர் பண்பு.
பாஜக உடன் கடந்த 18 மாதங்களாக கருத்து வேறுபாடு நீடித்தது. கடந்த டிசம்பர் 4ம் தேதியே பாஜகவில் இருந்து விலகுவதை தெரிவித்துவிட்டேன். என்னுடைய கருத்துக்கு பாஜக தலைமை செவிசாய்க்கவில்லை.
எதிர்காலத்தை நோக்கி பயணப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது. எதிர்காலம் என்னை அழைத்துச் செல்லும் பாதையில் பயணிக்க வேண்டிய நேரம் இது.
17 ஆண்டுகளாக போராடிகிட்டே இருக்கேன், அரசியலில் ஒரு புதிய பாதையை உருவாக்க முடியுமான்னு பாஜகவில் இருந்த 6 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுத் தந்தது இல்லை. தமிழ்நாட்டின் அடையாளத்தோடு பாஜக இருக்க வேண்டும் என விரும்பினேன்.
நான் பாஜகவில் இணைய இருந்த நாளில் நடிகர் ரஜினி ஆரம்பிக்க இருந்த கட்சியில் சேர என்னை அழைத்தார். ஆனால், பாஜகவில் இணைவதாக வாக்குறுதி அளித்ததால் ரஜினி அழைப்பை ஏற்கவில்லை; சென்னை திரும்பியதும் ரஜினியை சந்தித்து மன்னிப்பு கோரினேன்.
வளர்ந்த பாரதம் எனும் கனவோடு அரசியல் இயக்கம்; வளர்ந்த பாரதத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்க வேண்டும். நம் கட்சியில் நிரந்தரத் தலைவர், நிரந்தர எம்பி, எம்எல்ஏ கிடையாது புதிய அரசியல் இயக்கத்தை தொடங்குகிறேன்.
புதிய அரசியலை கட்டமைக்க உள்ளேன். அரசியலுக்கு புதியவர்கள் வந்துகொண்டே இருக்க வேண்டும். அடுத்து வரும் பொதுத்தேர்தலில் நமது கட்சி போட்டியிடும். we the Leaders என்ற அமைப்பில் நீங்கள் தன்னார்வலராக இணைத்து கொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளார்.