புதுக்கோட்டையில் 2 அமைச்சர்கள் இருந்தும் வேலைவாய்ப்புக்கு எந்த நடவடிக்கை இல்லை - அண்ணாமலை குற்றச்சாட்டு!
புதுக்கோட்டையில் இரு அமைச்சர்கள் இருந்தும் வேலைவாய்ப்புகள் வழங்க ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் "என் மண், என் மக்கள்" என்ற நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். பல்வேறு மாவட்டங்களில் தனது நடைப்பயணத்தை முடித்துள்ள அவர் தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபயணம் செல்ல உள்ளார்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்று புதுக்கோட்டை. புதுக்கோட்டை மாவட்டத்தில் ரகுபதி, சிவ மெய்யநாதன் என இரு அமைச்சர்கள் இருந்தும், வேலைவாய்ப்புகள் வழங்க ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
என்ன சேவை செய்வார்?
தமிழகத்தின் சட்டம், ஊழல் தடுப்பு மற்றும் சிறைத்துறை அமைச்சர் ரகுபதி. இவர் மேலேயே ஊழல் வழக்குகள் உள்ளன. துர்கா அம்மாவால் தான் எனக்கு அமைச்சர் பதவி கிடைத்தது என்று சொல்லும் இன்னொரு அமைச்சர் மெய்யநாதன், மக்களுக்கு என்ன சேவை செய்வார்?
வரும் பாராளுமன்ற தேர்தலில், இந்த மக்கள் விரோத சுயநல திமுக கூட்டணியை முழுவதுமாகப் புறக்கணிப்போம். மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் நல்லாட்சி தொடர, தமிழகம் முழுவதும், பாஜக கூட்டணி வேட்பாளர்களையே தேர்ந்தெடுத்து வெற்றி பெறச் செய்வோம்" என்று அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.