ஆளுநர் வில்லன்; செந்தில் பாலாஜி என்ன உத்தமரா? - அண்ணாமலை ஆவேசம் !
தாங்கள் செய்த தவறுகளை மறைப்பதற்கே ஆளுநரை வில்லனாக திமுகவினர் சித்தரிக்கின்றனர் என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பு
தமிழக ஆளுநர் ஆர். என் ரவி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு 15 பக்க புகார் கடிதத்தை அனுப்பிய நிலையில் இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
அண்ணாமலை பேட்டி
அப்போது பேசிய அவர் "தமிழகத்தில் ஆளுநருக்கு மரியாதை இல்லாத சூழல் தான் இருக்கிறது. ஆளுநரைப் பார்த்து தரக்குறைவாக ஒருமையில் ஒரு மாநிலத்தில் பேசுகிறார்கள் என்றால் அது தமிழகத்தில் தான். ஆளுநரை எவ்வளவு தரக்குறைவாக பேசமுடியும் அப்படியெல்லாம் பேசுகிறார்கள்.
ஆளுநர் இவர்கள் சொல்வதை அப்படியே ஒப்பிக்க வேண்டுமா ? அப்படி அவர் ஒப்பித்தால் திமுக சொல்லும் பொய்களை அப்படியே கூறவேண்டி இருக்கும். வரும் பாராளுமன்ற தேர்தல் மீதான முதலமைச்சரின் தோல்வி பயமும்,இயலாமையும் தான் குடியரசுத்தலைவருக்கு முதலமைச்சர் அ எழுதிய கடிதமாக நான் பார்க்கிறேன்.
செந்தில் பாலாஜியை உத்தமராகவும், புத்தராகவும் திமுகவினர் சித்தரிக்கின்றனர் என்றும் கட்சியின் தவறுகளை மறைப்பதற்காக ஆளுநரை வில்லனாக காட்டுகிறார்கள் என்றும் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார்.